இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24மணி நேரத்தில் நாடெங்கும் புதிதாக 752 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் கேரளா, கர்நாடகாவில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகளவில் பதிவானது கடந்த 7 மாதங்களில் இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாளில் கொரோனாவால் 4 பேர் இறந்துள்ளதாகவும் இதில் இருவர் கேரளாவையும் தலா ஒருவர் ராஜஸ்தானையும் கர்நாடகாவையும் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,420 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது பரவி வரும் புது வகை கொரோனா அதிக ஆபத்து அற்றது என்று இதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி தெரியவந்துள்ளதாகவும் எனவே அச்சம் தேவையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
புது வகை கொரோனாவால் அதிக ஆபத்து இல்லை என்றாலும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது என்றும் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.