வரிச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு கேலிக்கூத்து: ப.சிதம்பரம்

வரிச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு கேலிக்கூத்து: ப.சிதம்பரம்
வரிச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு கேலிக்கூத்து: ப.சிதம்பரம்
Published on

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நகைப்புக்குரியது. முழுமை பெறாத ஒரு நடவடிக்கை இது. இதை ஒரே தேசம், ஒரே வரி என்று குறிப்பிட முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

நாடு முழுவதும் மறைமுக வரிகளை நீக்கிவிட்டு ஜி.எஸ்.டி. என்ற ஒற்றை வரியை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த வரி அதிகமாக இருப்பதாகக் கூறி பெரும்பாலான மாநிலங்களில் வர்த்தகர்கள், தொழில்துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, ’காங்கிரஸ் கட்சி கூறிய ஜி.எஸ்.டி. வரி வேறு, மத்தியில் ஆளும் பாஜக அரசு நடைமுறைப்படுத்திய ஜி.எஸ்.டி. வேறு. காங்கிரஸ் ஜி.எஸ்.டி.யில் 18 சதவீதத்துக்கு மேல் வரியை அதிகப்படுத்தக்கூடாது என்று கூறியது. பெட்ரோல், மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளை ஜி,எஸ்.டி-க்குள் கொண்டுவரக் கூறினோம். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. வரிச்சட்டம், முழுமை பெறாத சட்டம். 7 வகையான வரிகளை உள்ளடக்கிய, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு கேலிக்கூத்தாக மாறியுள்ளது. 0.25 சதவீதம், 3, 5, 12, 18, 28, 40 என மொத்தமாக 7 வரி விகிதங்கள் இருக்கிறது, இதில் மாநிலங்களுக்கும் சுயமாக வரிவிதிக்கும் அதிகாரம் இருந்தால், இன்னும் வரி கூடுதலாக உயரும். பின் எப்படி ஜி.எஸ்.டி.யை ஒரே தேசம், ஒரே வரி என்று கூறுவீர்கள்?.
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தும் போது, அதிகாரிகளும் முறையாக தயாராகவில்லை. வர்த்தகர்களும், தொழில்துறையினரும் தயாராகவில்லை. வரியை அமல்படுத்துவதை 2 மாதங்கள் தள்ளி வைத்து, ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கை சோதனை முறையாக செயல்படுத்தி இருக்க வேண்டும். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் நடத்தி, காங்கிரஸ் கொண்டுவர நினைத்த ஜி.எஸ்.டி. குறித்தும், உண்மையான ஜி.எஸ்.டி குறித்தும் பிரச்சாரம் மேற்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com