ஒவ்வொரு வயதுக்கும் ரூ.74,500... ஒரு மரம் எவ்வளவு? - உச்ச நீதிமன்றத்தில் மதிப்பீடு தாக்கல்!

ஒவ்வொரு வயதுக்கும் ரூ.74,500... ஒரு மரம் எவ்வளவு? - உச்ச நீதிமன்றத்தில் மதிப்பீடு தாக்கல்!
ஒவ்வொரு வயதுக்கும் ரூ.74,500... ஒரு மரம் எவ்வளவு? - உச்ச நீதிமன்றத்தில் மதிப்பீடு தாக்கல்!
Published on

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, இந்தியாவில் ஒரு மரத்தின் விலையை ஒரு வருடத்துக்கு ரூ.74,500 ஆக நிர்ணயித்துள்ளது. மரத்தின் வயதுக்கு ஏற்ப, இந்தத் தொகையை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஐந்து ரயில் ஓவர் பாலங்கள் (ஆர்ஓபி) அமைப்பதற்காக 356 மரங்களை வெட்டுவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஐந்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமித்தது. நிஷிகாந்த் முகர்ஜி (புலி சுற்றுச்சூழல் மையத்தின் நிர்வாக இயக்குநர்), சோஹம் பாண்ட்யா (கிராமங்களுக்கான அறிவியல் மையத்தின் செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர்), சுனிதா நரேன் (இயக்குநர், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்), பிகாஷ் குமார் மாஜி (உதவி தலைமை பொறியாளர், ROB பிரிவு, மேற்கு வங்க அரசு) மற்றும் நிரஞ்சிதா மித்ரா (வன அலுவலர்) ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

மரங்களின் பொருளாதார மதிப்பை, அவை வெளியிடும் ஆக்ஸிஜனின் விலை மற்றும் சுற்றுச்சூழலுக்கான பிற நன்மைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கும்படி, அந்தக் குழுவிடம் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி, இந்தியாவில் முதன்முறையாக மரங்களின் மதிப்பீடு குறித்த வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை, இந்திய தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) எஸ்.ஏ.போப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின்படி, ``ஒரு மரத்தின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.74,500 ஆகும். இதில், ஆக்ஸிஜனின் விலை மட்டும் ரூ.45,000 ஆகும், அதைத் தொடர்ந்து உயிர் உரங்களின் விலை ரூ.20,000 ஆகும். நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் செலவுகளைச் சேர்த்தால் உயிருள்ள மரங்கள் பெரும்பாலும் அவை வெட்டப்பட்ட பெரும்பாலான திட்டங்களின் நன்மைகளை விட அதிகமாக இருக்கும்" என்று கூறப்பட்டது.

மேற்கு வங்க அரசு 356 மரங்களை வெட்ட வேண்டும் என்ற வேண்டுகோளைப் பற்றி கருத்து தெரிவித்த இக்குழு, அவற்றில் சில பாரம்பரிய மரங்களின் மதிப்பு 220 கோடி ரூபாய் என மதிப்பிட்டது. மேலும், நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை எளிதாக்க ஏற்கெனவே இருக்கும் நீர்வழிகள் மற்றும் ரயில் பாதைகளைப் பயன்படுத்துவது போன்ற மாற்று வழிகளை அரசாங்கங்கள் முதலில் ஆராய வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.

மரங்கள் அகற்றப்பட வேண்டும் என்றால், முதல் முயற்சியாக அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டும்; நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரு மரத்திற்கு பதிலாக ஐந்து மரக்கன்றுகளை நடவு செய்வது போதுமானதல்ல. ஏனெனில் 100 ஆண்டுகள் பழமையான ஒரு மரத்தை ஒரு சில புதிய மரக்கன்றுகளுடன் ஒப்பிட முடியாது. சிறிய கிரவுன் அளவுள்ள ஒரு மரத்திற்கு, 10 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. நடுத்தர கிரவுன் அளவு கொண்ட ஒரு மரத்திற்கு 25 மரக்கன்றுகள் மற்றும் பெரிய கிரவுன் அளவுள்ள ஒரு மரத்திற்கு 50 மரக்கன்றுகள். (கிரவுன் என்பது மரத்தின் ஒரு பகுதியாகும், அதில் இருந்து கிளைகள் தண்டுக்கு மேலே வளரும்.)

ஒரு பாரம்பரிய மரம் சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் சேவை செய்கிறது. அதன் மதிப்பீட்டை ஆக்ஸிஜன், மைக்ரோ சத்துக்கள், உரம் மற்றும் உயிர் உரங்கள் உள்ளிட்ட பல்வேறு எண்ணிக்கையில் அடையலாம். ஒரு பாரம்பரிய மரம் என்பது ஒரு பெரிய மரம், இது முதிர்ச்சியடைய பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் ஆகும். 100 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்ட ஒரு பாரம்பரிய மரத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கக்கூடும்" என்றும் அக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் இந்த அறிக்கையை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. "குழுவின் பரிந்துரை ஒவ்வொரு அரசாங்கத்தையும் திவாலாக்கும். எனவே, நாங்கள் சில பரிந்துரைகளை நன்றாகக் கையாள வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. மேலும் மத்திய அரசு, மேற்கு வங்க அரசு மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமிருந்து பதில்களைக் கோரியது.

எனினும் விசாரணையின்போது, குழுவின் முயற்சிகளைப் பாராட்டிய நீதிபதிகள், அறிக்கையின் பார்வையில் மரங்களை வெட்ட வேண்டிய அனைத்து எதிர்கால திட்டங்களுக்கும் சில புதிய வழிகாட்டுதல்களை வகுக்க விரும்புவதாகவும் கூறியிருக்கின்றனர். அதோடு, மரங்களை வெட்டுவதற்குத் தேவையான ஒரு சாலைத் திட்டத்தை வலியுறுத்துவதற்கு முன்பு, ஏற்கெனவே இருக்கும் நீர்வழிகள் மற்றும் ரயில் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற குழுவின் பரிந்துரையை நீதிபதிகள் வெகுவாக வரவேற்றனர்.

- மலையரசு

தகவல் உறுதுணை: The News Minute 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com