சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தாய்மொழி வழி கல்வி கட்டாயமா ? - அமைச்சர் விளக்கம்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தாய்மொழி வழி கல்வி கட்டாயமா ? - அமைச்சர் விளக்கம்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தாய்மொழி வழி கல்வி கட்டாயமா ? - அமைச்சர் விளக்கம்
Published on

புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு முன்னர் கடுமையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘த ஹிந்து’  நாளிதழுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் :

கேள்வி: 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்பிக்கும் கொள்கை முடிவு நாடு முழுவதும் கட்டாயமாக செயல்படுத்தப்படுமா அல்லது ஒவ்வொரு மாநில கல்வித் துறையின் விருப்பமா? இந்த விவகாரத்தில் மாநிலங்களின் கருத்துகளை மத்திய அரசு எடுத்துள்ளதா? இதை செயல்படுத்துவதில் எந்த மாநிலங்களும் கவலைகளை எழுப்பியுள்ளதா?

பதில்: புதிய தேசிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு முன்பு அனைத்து விதமான ஆலோசனைகளையும், அணுகுமுறைகளையும் கல்வி அமைச்சகம் மேற்கொண்டது. 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 6,600 பிளாக்குகள், 6,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 676 மாவட்டங்களில் இருந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன.

பெரும்பாலான வளர்ந்த நாடுகள் குழந்தை தாய்மொழியில் படிப்பதை உறுதிசெய்ய மிகுந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. இதனால் குழந்தையின் ஆரம்பகால கல்வியில் பெற்றோர் அவர்கள் உறுதுணையாக இருக்கின்றனர். அதனால்தான் தாய்மொழிக் கல்வி 5-ஆம் வகுப்பு வரை அவசியம் என கூறியிருக்கிறோம். அதேசமயம், மீடியம் விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.

கேள்வி: இந்த முடிவை செயல்படுத்துவதற்கான காலக்கெடு என்ன? எல்லா பிராந்திய மொழிகளிலும் போதுமான ஆசிரியர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்களா?

பதில்: இந்தியாவில் திறமையான மொழி ஆசிரியர்களின் பற்றாக்குறை கடுமையான ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளிலும் அதிக எண்ணிக்கையிலான மொழிப்பாட ஆசிரியர்களை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் கடும் முயற்சி மேற்கொள்ளும்.

மொழியின் இலக்கியம், சொல்லகராதி மற்றும் இலக்கணம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் உரையாடல் திறனை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். மொழி கற்பித்தல் அனுபவமிக்கதாக இருக்க வேண்டும். உரையாடலுக்கும் கற்பித்தலுக்கும், கற்றலுக்கும் மொழிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட வேண்டும். பள்ளியிலும் உயர் கல்வியிலும் மொழிகளை வளர்ப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ ஆகியவற்றுடன் இணைந்த தனியார் மற்றும் பொதுப் பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிப்பது கட்டாயம் என கேட்கப்படுமா? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேந்திரியா வித்யாலயாக்களைப் பற்றி எப்படி?

பதில்: இந்தக் கொள்கையின் அழகு நெகிழ்வுத்தன்மை. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட ஆணையைப் பின்பற்றுவதே கொள்கையின் நோக்கம். ஒரு துடிப்பான இந்தியாவை உருவாக்கும் பணியில் அனைவரையும் அழைத்துச் செல்ல முயற்சிப்போம்.

கேள்வி :இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா ஒரு வருடத்திற்கும் மேலாக வரைவு கட்டத்தில் உள்ளது. இது எப்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்?

பதில்: அமைச்சரவை குறிப்போடு கல்வி அமைச்சகம் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. விரைவில் அரசாங்கத்தின் ஒப்புதல் பெறும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com