உடற்கூராய்வு முடிவின் படி காஃபி டே சித்தார்த்தாவின் இறப்பு தற்கொலைதான் என போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் காஃபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார். கடந்த மாதம் 29ம் தேதி சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றங்கரையோரம் மாயமானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் 36 மணி நேரத்துக்கு பிறகு அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் உடற்கூராய்வு செய்யப்பட்ட அவரது உடல் அவரது காஃபி எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் உடற்கூராய்வு முடிவின் படி சித்தார்த்தா தற்கொலைதான் செய்துகொண்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்த, மங்களூரு மாநகர காவல் ஆணையர் ஹர்ஷா, சித்தார்த்தாவின் மரணம் தற்கொலை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் வழக்கு இறுதி கட்டத்தை எட்டும் வரை விசாரணை தொடரும் என தெரிவித்தார்.
(சித்தார்த்தாவின் தந்தை கங்கையா ஹெக்டே)
இந்நிலையில் மைசூரில் 6 மாதங்களாக சிகிச்சையில் இருந்த சித்தார்த்தாவின் தந்தை கங்கையா ஹெக்டே கடந்த 25ம் தேதி காலமானார். இவர் 3 மாதங்களாக கோமாவில் இருந்துள்ள நிலையில் தன் மகனான சித்தார்த்தாவின் மரண செய்தியைக் கூட அறியாமல் கங்கையா காலமானார்.அடுத்தடுத்த உயிரிழப்புகளால் சித்தார்த்தா குடும்பத்தினரும், நிறுவன ஊழியர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்