தேசிய அளவில் மம்தா 'இமேஜை' கட்டம் கட்ட தீவிரம் - புது பிளானை கையிலெடுத்த பாஜக!

தேசிய அளவில் மம்தா 'இமேஜை' கட்டம் கட்ட தீவிரம் - புது பிளானை கையிலெடுத்த பாஜக!
தேசிய அளவில் மம்தா 'இமேஜை' கட்டம் கட்ட தீவிரம் - புது பிளானை கையிலெடுத்த பாஜக!
Published on

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு புதிய சிக்கலை கொடுக்க மத்திய பாஜக தலைமை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தலுக்குப் பிந்தைய இந்த வன்முறை சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த வன்முறைச் சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. தேர்தல் வன்முறை சம்பவத்தை வைத்து மம்தாவை தேசிய அளவில் 'கார்னர்' செய்ய மத்திய பாஜக திட்டமிட்டுள்ளதாக 'டெக்கான் ஹெரால்டு' வெளியிட்ட செய்தி ஒன்று தெரிவிக்கிறது. மேற்கு வங்க பாஜக தலைவர்கள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில், 'தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக பிற மாநிலங்களின் கட்சித் தலைவர்களை சந்தித்து மம்தாவுக்கு எதிராக குரல்கொடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பாஜகவின் மத்திய தலைமை, மாநிலப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. பிற மாநிலங்களில் பிரசாரம் செய்து மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையை எடுத்துக்காட்டுவதன் மூலம் தேசிய அளவில் திரிணாமூல் கட்சி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மக்களிடம் எதிர்மறை இமேஜே ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

மேற்கு வங்கத்தில் தற்போது இருக்கும் லாக்டவுன் போன்ற நிலைமை காரணமாக வன்முறை தொடர்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாத சூழ்நிலையில் மாநில பாஜக உள்ளன. எனவேதான் பாஜக தலைமை தேசிய அளவில் உள்ள பிற மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு வன்முறையை எடுத்துரைத்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் மம்தா பானர்ஜியை தேசிய அளவில் 'கார்னர்' செய்வதும் இந்த முயற்சியின் முக்கிய குறிக்கோள் ஆகும். இதனை செய்ய திலீப் கோஷ், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து ஆதிகாரி, கைலாஷ் விஜயவர்ஜியா, பூபேந்திர யாதவ் போன்ற மாநில தலைவர்களுக்கு பாஜக மத்திய தலைமை அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்த அழுத்தத்தின் காரணமாக இதுவரை மாநில பாஜக தலைமை 13 மாநிலங்களின் கட்சித் தலைவர்களுடனும் ஒரு யூனியன் பிரதேச தலைவர்களுடனும் சந்திப்புகளை நடத்தி வன்முறையின் தாக்கத்தை எடுத்துரைத்துள்ளது. மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் பாஜக தலைவர்களுடன் நேரடி சந்திப்புகளையும், குஜராத் மற்றும் மேகாலயாவில் உள்ள கட்சித் தலைவர்களுடன் தொலைபேசி உரையாடல்களையும் நிகழ்த்தியுள்ளார்.

அவரைப்போலவே கைலாஷ் விஜயவர்ஜியா பீகார், பஞ்சாப், உத்திரகண்ட் மற்றும் யாதவ் ஆகிய இடங்களில் கட்சித் தலைவர்களுடன் சந்திப்புகளையும், பூபேந்திர யாதவ் அசாம் மற்றும் நாகாலாந்து மாநில கட்சித் தலைவர்களை சந்தித்தும் பேசியிருக்கின்றனர். இவர்கள் வலியுறுத்திய மற்ற மாநில தலைவர்களில் பாஜக ஆளும் மாநிலங்கள் பெரும்பாலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கூட மம்தாவை குற்றம்சாட்டி மேற்கு வங்க பாஜக பேசியிருக்கிறது. தொடர்ந்து இந்த பிரசாரத்தை தீவிரப்படுத்த கட்சித் தலைமை அக்கறை கொண்டுள்ளது' என்று விவரிக்கிறது அந்தச் செய்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com