வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் உயிர் பிழைத்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றன.
நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளவர்களை, பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் ஆகியோரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் எஸ்டிபிஐ கட்சியின் செயல்வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவும் வகையில் 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. வேலிடிட்டி முடிந்த வாடிக்கையாளர்களுக்கு 3 நாள் கூடுதல் வேலிடிட்டி, ஒரு ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் வசதி ஆகியவை வழங்கப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்துவதற்கான காலஅவகாசத்தையும் 30 நாட்கள் நீட்டித்துள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.