மோசடிக்கு வாய்ப்புள்ள கடன்களை ஆய்வு செய்யுங்கள்: நிதி அமைச்சகம்

மோசடிக்கு வாய்ப்புள்ள கடன்களை ஆய்வு செய்யுங்கள்: நிதி அமைச்சகம்
மோசடிக்கு வாய்ப்புள்ள கடன்களை ஆய்வு செய்யுங்கள்: நிதி அமைச்சகம்
Published on

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை அடுத்து, வங்கிகளில் ரூ.50 கோடிக்கு மேல் வழங்கப்பட்ட கடன்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளை மூலம் நடந்த ரூ.11,500 கோடி மோசடி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டார். நிரவ் மோடி தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பி விட்டார். இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல அமலாக்கத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் உள்ள நிரவ் மோடி நிறுவனங்களிலும் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அரசுத்துறை வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்து ஆய்வு செய்து, அதில் மோசடி செய்வதற்கான வாய்ப்புள்ள கடன்கள் குறித்து சிபிஐ-யிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், அதில் சொத்தில்லா பரிவர்த்தனை கணக்குகள் மூலம் ரூ.50 கோடிக்கு மேல் வழங்கப்பட்ட கடன்களில் மோசடிக்கு வாய்ப்புள்ளவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com