கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவு தொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இது வரலாறு காணாத வேதனை அளிக்கும் பேரழிவு என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “இதுவரை 144 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 79 பேர் ஆண்கள். 64 பேர் பெண்கள்” என்று தெரிவித்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவ சிகிச்சை உடனுக்குடன் அளிக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் கூட நிவாரண முகாம்களில் உதவி செய்து வருகிறார்கள். நிலச்சரிவுகளில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் சிகிச்சை பெறும் மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார்கள். அதேபோல் ஏகப்பட்ட தன்னார்வலர்களும் முகாம்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உணவுப் பொருட்கள், மருந்துகள், உடைகள், அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றை சேகரிக்கும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களிலும் பல்வேறு தன்னார்வலர்கள் அத்தியாவசியப் பொருட்களை சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநில நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி அம்மாநில எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி. கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலினும் அறிவித்தார்.
பலரும் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அதானி குழுமத்தின் சேர்மேன் கௌதம் அதானி, கேரள மாநிலத்திற்கு உதவி செய்ய முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி ரூபாய் நிதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வயநாட்டில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகளுக்கு வருந்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அதானி குழுமம் கேரளாவிற்கு உறுதுணையாக நிற்கிறது. கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் நன்கொடையுடன் எங்களது ஆதரவையும் வழங்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.