செய்தியாளர்: தினேஷ் குணகலா
சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலி அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
முன்னதாக சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வேகமாக வந்த இன்னொரு லாரி விபத்தில் இருந்து தப்புவதற்காக அந்த லாரியின் ஓட்டுநர் வலது புறமாக திருப்ப முயன்றுள்ளார். அப்போது எதிர் திசையில் சென்னையிலிருந்து சென்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில் 15 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இதைத் தொடர்ந்து விபத்தில் சேதமடைந்த பேருந்து மற்றும் லாரியை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.