மணிப்பூர்: மீண்டும் வெடித்த வன்முறை.. 5 பேர் பலி!

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர்
மணிப்பூர்ani
Published on

மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த வருடம் (2023) தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர்.

கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த வன்முறை, ஓராண்டைக் கடந்தும், இன்றளவும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலை, மணிப்பூர் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவின் தோல்விச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. முன்னதாக, கடந்த மாத தொடக்கத்தில், இருதரப்புக்கு இடையே இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.

மணிப்பூர்
அமைதிக்கு திரும்பிய மணிப்பூரில், மீண்டும் வெடித்த வன்முறை.. 2 பேர் பலி!

பின்னர் அமைதி காத்த நிலையில், அம்மாநில முதல்வர் பைரேன் சிங், இன்னும் 6 மாதங்களில் முழுமையாக அமைதி திரும்பும் என உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் மணிப்பூரில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வன்முறை வெடித்தது. மணிப்பூரின் மேற்கு இம்பால் நகரில் கவுடிரக் பகுதியில் குக்கி இனத்தவர்களில் சிலர், உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஆளில்லா விமானங்களின் உதவியுடன் எறிகுண்டுகளை வீசினர். துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இந்த எதிர்பாராத தாக்குதலில் சிக்கி பெண் ஒருவர் உள்பட 2 பேர் பலியானார்கள். இந்த வன்முறை சம்பவத்தில் கிராமத்தில் இருந்த வீடுகள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இதையும் படிக்க: கட்சியில் இணைந்த வினேஷ் போகத்| “எனக்கு எதிரான போராட்டம் காங்கிரஸின் சதி” - பிரிஜ் பூஷண் சரண் சிங்

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்கோப்புப்படம்

இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 229 கி.மீ தொலைவில் உள்ள மாவட்டத்தில் உள்ள நுங்சாப்பி கிராமத்தில் குக்கி கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

மணிப்பூரின் மொய்ராங் நகரில் குக்கி கிளர்ச்சியாளர்களால் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில், பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்தும் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொல்லப்பட்ட ஒருநாள் கழித்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த சண்டையில் இருத்தரப்பை சேர்ந்த 5 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், நான்கு குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களும், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பின்னர், இந்த வன்முறை ரஷீத்புர் வரை தீவிரமடைந்தது. அங்கு காலை 9.50 மணி வரை இடைவிடாத துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது. இந்த மோதல்கள் காரணமாக அந்த பகுதியில் பதற்றத்துடன் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதுடன், கிளர்ச்சியாளர்களின் பதுங்குக்குழிகள் அழிக்கபப்ட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் குக்கி இன கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இது மெய்தி இன மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் நேற்று மதியம் ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இந்த குண்டு, பயங்கரசத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அங்கு பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க; ஷாக் கொடுக்கும் 2024 | ஒரே மாதத்தில் 27 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிய 40 நிறுவனங்கள்!

மணிப்பூர்
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை: இருதரப்பினரிடையே நடந்த பயங்க மோதலில் 9 பேர் பலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com