அம்பானிக்கு 'அச்சுறுத்தல்' to 'ரூ.100 கோடி வசூல்'... மகாராஷ்டிர அரசியல் அனலும், பாஜகவும்!

அம்பானிக்கு 'அச்சுறுத்தல்' to 'ரூ.100 கோடி வசூல்'... மகாராஷ்டிர அரசியல் அனலும், பாஜகவும்!
அம்பானிக்கு 'அச்சுறுத்தல்' to 'ரூ.100 கோடி வசூல்'... மகாராஷ்டிர அரசியல் அனலும், பாஜகவும்!
Published on

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தின் அருகில் வெடிபொருள்களுடன் வாகனம் ஒன்று பரபரப்பான சூழ்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் பெரும் புயலாக உருவெடுத்து வருகிறது. வெடிபொருள் கொண்ட வாகனத்தை அங்கே நிறுத்தியது மும்பை போலீசை சேர்ந்த ஓர் அதிகாரி என்பதும், அந்த அதிகாரிக்கு உள்துறை அமைச்சர் வரை நேரடித் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரத்தால், ஏற்கெனவே மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங்கின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக்கின் பதவியும் பறிபோகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்த சர்ச்சையின் மூலமாக வெளிவந்துள்ள ஊழல் விவகாரங்கள், சிவசேனா தலைமையில் செயல்படும் மகாராஷ்டிரா அரசை ஆட்டம் காண வைத்துள்ளது. மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் செய்த சட்டவிரோத குளறுபடி காரணமாக ஓர் உயிர் பலியாகியுள்ளது என்றும், பல ஊழல் விவகாரங்கள் கசிந்து பொதுமக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்றும் மும்பை போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அரசியல் புயல் வலுக்க காரணம் என்ன?

சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை முகேஷ் அம்பானி இல்லம் அருகே நிறுத்தியது ஏன்? இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியை மிரட்ட நடத்தப்பட்ட சதியின் காரணம் யார்? இந்த சதியின் நோக்கம், முகேஷ் அம்பானியிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதா? - இப்படி பல்வேறு அதிர்ச்சிக் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன.

இந்த சர்ச்சையின் ஆழம் என்ன என்று ஆரம்பத்தில் பொதுமக்களுக்கு புரியாமல் இருந்த நிலையில், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூல் செய்து கொடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளதால், அரசியல் புயல் மேலும் வலுவடைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நடந்துவரும் கூட்டணி அரசில் ஒருபக்கம் சிவசேனா; இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ்; மற்றும் மூன்றாவது அணியாக காங்கிரஸ் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

யார் இந்த சச்சின் வாஸ்?

பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய சிவ சேனா தனி கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பொறுப்பேற்ற பின், சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரி சச்சின் மீண்டும் மும்பை போலீசில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்பதே இந்த சர்ச்சையின் முக்கிய புள்ளியாக இருக்கிறது. இதற்கு முன்பு மும்பை போலீசில் என்கவுன்டர் வல்லுனராக இருந்து கிட்டத்தட்ட 63 குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததாக சொல்லப்படும் சச்சின் 2003-ஆம் வருடத்திலேயே ஒரு சர்ச்சையில் சிக்கி போலீசில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

சிவா சேனா ஆதரவாளர் என்று அடையாளம் காணப்படும் சச்சின், 2004-ஆம் வருடத்தில் சஸ்பென்ட் செய்யப்பட்டார். குவாஜா யூனிஸ் என்கிற விசாரணைக் கைதி போலீஸ் காவலில் இருந்தபோது மரணம் அடைந்ததற்கு சச்சின் காரணம் என குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையிலே, போலீஸ் படையை விட்டு அவர் வெளியேறினார். நீதிமன்றங்களில் அவர் தன்னை பதவியில் மீண்டும் நியமிக்கவேண்டும் என்று தொடர்ந்த வழக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் சிவசேனா கட்சியில் சேர்ந்தார் என்பதும் தற்போது முக்கிய அரசியல் புள்ளியாக இருக்கிறது.

சிவசேனா கட்சியிலே சேர்ந்து ஒரு அரசியல்வாதியாக மாறி இருந்த சச்சின் வாஸ், மீண்டும் போலீஸ் துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது எப்படி?

இந்தக் கேள்விக்கு விடை தேடும்போது கிடைத்த தகவல்: சென்ற வருடம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த சூழ்நிலையில், போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்ற காரணத்தை தெரிவித்து, உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வரும் மகாராஷ்டிரா அரசு சச்சினை மீண்டும் போலீஸ் பணியில் சேர்த்துக் சேர்த்துக்கொண்டது. ஏற்கெனவே சர்ச்சைக்குரியதாக இருந்தவரும், பதவி நீக்கம் செய்யப்பட்டவருமான சர்ச்சைக்குரிய போலீஸ் போன்ற விஷயங்களை எல்லாம் புறந்தள்ளி, சச்சினுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.

இப்போது சச்சின் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் உள்ளார். இவர் ஏன் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிபதியான முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே வெடி பொருள்கள் கொண்ட வாகனத்தை நிறுத்தினார் என்ற கேள்வி மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருக்கிறது. சிசிடிவி மூலம் கிடைத்த ஆதாரங்களை வைத்து, இந்த வாகனத்தை சச்சின் அங்கே எப்படி கொண்டு வந்து நிறுத்தினார் என்றும், அவருக்கு உறுதுணையாக இருந்தது யார் என்றும் விசாரணை நடந்து வருகிறது.

வெடிபொருள்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்கார்பியோ வாகனம் மன்சுக் ஹிரேன் என்பவருக்கு சொந்தமானது. இந்த வாகனம் வெடிபொருளுடன் கண்டுபிடிக்கப்பட்ட சர்ச்சைக்கு பிறகு ஹிரேன் உயிரிழந்துள்ளார். அவருடைய உடல் தானே நகர் அருகே கண்டெடுக்கப்பட்டது, இந்த வழக்கின் விசாரணையில் பெரிய திருப்பமாக இருந்தது.

விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சச்சின்தான் இந்த வாகனத்தை ஹிரேனிடம் இரவல் வாங்கி இந்த சதிக்கு பயன்படுத்தினார் என்றும், பின்னர் ஹிரேனை கட்டாயப்படுத்தி வாகனம் காணாமல் போனதாக போலீசில் பொய் புகார் அளிக்க வைத்தார் என்றும் சொல்கின்றனர். அதேசமயத்தில் சச்சின் வசமிருந்த ஒரு மெர்சிடிஸ் காரையும் கண்டு எடுத்திருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாகனத்தில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் மற்றும் ரொக்கத்தை எண்ணும் ஒரு கருவியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதைவிட முக்கியமாக, முகேஷ் அம்பானி இல்லத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோ வாகனத்தின் எண் பலகையும் இந்த மெர்சிடிஸ் வாகனத்துக்கு உள்ளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல போலி நம்பர் பலகைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, பல்வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் சச்சின் ஈடுபட்டு வந்தார் என்பது தெளிவாகிறது என்று தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

மும்பை போலீஸ் படையை சேர்ந்தவர்களே மும்பையின் நகரின் முக்கியப் பகுதியில் வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை நிறுத்தினர் என்று தெரிந்தபிறகு, அப்போது மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பதவிநீக்கம் செய்யப்பட்டு, வேறொரு பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். மகாராஷ்டிர அரசு இந்த நடவடிக்கை எடுத்த பிறகு அவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் எப்படி சச்சின் மற்றும் உள்துறை அமைச்சரான அனில் தேஷ்முக் ஆகியோருக்கு இடையே நேரடி தொடர்பு இருந்தது என்பதை குறிப்பிட்டுள்ளார். சச்சின் ஒவ்வொரு மாதமும் 100 கோடி வசூல் செய்து கொடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வலியுறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆகவே, தற்போது நடந்துள்ள குற்றம் சச்சின் வரை நிற்காமல், தொடர்பு உள்துறை அமைச்சர் வரை போவதாக தற்போது குற்றம்சாட்டப்பட்டு அரசியல்ரீதியாக இந்த வழக்கு மிகவும் பரபரப்பான நிலையை அடைந்துள்ளது. ஆகவேதான் ஒரு பக்கம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி; இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அணில் தேஷ்முக் ராஜினாமா செய்ய வேண்டுமா அல்லது அவர் வேறு துறைக்கு மாற்றப்பட வேண்டுமா என்று ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

ஒருபக்கம் சச்சினுக்கு ஆதரவாக பேசி, இதனால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் முதல்வரும், சிவசேனா கட்சியை சேர்ந்தவர்களும் எப்படி இந்த பிரச்னையில் இருந்து மீள்வது என யோசித்துக் கொண்டிருப்பதாக மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சச்சின் மூலம் இன்னும் என்னென்ன உண்மைகள் வெளியே வரும், மேலும் அவருடன் பணிபுரிந்த காவல்துறையை சேர்ந்தவர்கள் மூலமாக வேறு பல சர்ச்சைகளில் வெளிவரலாம் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. மும்பை போலீஸ் கமிஷனர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பரம்வீர் சிங் இன்னும் என்ன உண்மைகளையெல்லாம் வெளிக்கொண்டு வருவார் என்ற பரபரப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கிடையே நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகாராஷ்டிர அரசு விரைவில் ஆட்டம் காணும் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் சொல்லி வருகிறார்கள். பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை அரசியல் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து செயல்பட்ட பின்னரும் எப்படி உத்தவ் தாக்கரே அரசு பதவியிலே மீண்டும் நியமித்தது என்ற கேள்வியை பாரதிய ஜனதா கட்சி எழுப்புகிறது.

மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்றும், இதற்கு ஒட்டு மொத்த மகாராஷ்டிரா அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி வருகிறார். சிவசேனா அமைதி காத்து வரும் நிலையில், சரத்ப வார் சென்ற வருடம் சச்சினை மீண்டும் பதவியில் நியமித்தது கமிஷனர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பரம்வீர் சிங் என்று பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளார். தனது கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மற்றும் அவரது ஆதரவாளர்களை காப்பாற்றும் முயற்சியில் பவார் ஈடுபட்டுள்ளார் என பாரதிய ஜனதா கட்சியை குற்றம்சட்டுகிறது.

இந்த அரசியல் சதுரங்கத்தில், அணில் தேஷ்முக் மற்றும் மகாராஷ்டிர அரசு எத்தகைய புயலை வரும் நாட்களில் சந்திக்க நேரிடும் என்பது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மட்டுமல்லாமல், அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு மும்பையில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நிலவி வருகிறது. அப்படிப்பட்ட ஒருவரை கொல்ல முயற்சி நடந்ததா என்றும் அதிர்ச்சியுடன் போலீஸ் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

மும்பையில் என்னதான் நடக்கிறது என தொழிலதிபர்களும் கலங்கி உள்ளனர். முகேஷ் அம்பானி பெரிய செல்வந்தர் மட்டும் அல்ல; அரசியல் கட்சிகளிடையேகூட மிகுந்த செல்வாக்கு வாய்ந்தவர் என்றும், அவருக்கே இந்த நிலை என்றல், மற்றவர்களின் கதி என்ன என்ற கவலை தொடர்கிறது. அம்பானி இல்லத்தின் அருகே வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை நிறுத்தி, அவரை மிரட்ட ஒரு போலீஸ் அதிகாரி அரசியல் பின்புலம் இல்லாமல் முயற்சி செய்ய வாய்ப்பே இல்லை என தொழிலதிபர், அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com