அதிகரிக்கும் மாரடைப்பு அச்சம்... ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி இருக்கும் அறிகுறிகள்?
உலகளவில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கு பெரும்பாலும் கூறப்படுகிற காரணம் மாரடைப்பு. மாரடைப்பு ஏற்படும்போது ஆண்களை விட பெண்களுக்கு அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதாகக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நெஞ்சு வலி, விறைப்புத் தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை மாரடைப்புக்கு பொதுவான காரணங்களாகக் கூறப்பட்டாலும், இந்த அறிகுறிகள் பெரும்பாலும் பெண்களுக்கு காணப்படுவதில்லை. பெண்கள் ஒருவித இறுக்கம், நெஞ்செரிச்சல், அழுத்தம் போன்ற அறிகுறிகள் சில நிமிடங்களுக்கு வந்து வந்து போகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மாறுபட்ட உயிரியல் தன்மை: ஆண், பெண் இருவருக்கும் சரீர அமைப்பு மற்றும் இதய மண்டலம் என அனைத்தும் வேறுபட்டு காணப்படுகிறது. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் இதயம் சற்று சிறிதாகவும், ரத்த நாளங்கள் குறுகலாகவும் இருக்கும். மாரடைப்பு ஏற்படும்போது அறிகுறிகள் மாறுபட்டு காணப்பட இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
வெவ்வேறு நிலைகளில் உருவாகும் கொழுப்பு: மாரடைப்புக்கு முக்கிய காரணம், கொழுப்புகள் ஒன்றுசேர்ந்து கட்டியாகி, இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துவதுதான். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் தமனிகள் சிறியது என்பதால் பெண்களுக்கு பாதிப்பு அதிகம்.
மாரடைப்பே வேறுமாதிரி இருக்கும்: மாரடைப்பு வரும்போது ஆண், பெண் இருவருக்கும் ஏற்படும் நெஞ்சுவலியே வேறுமாதிரியாக இருக்கும். பெண்களுக்கு குமட்டல், வாந்தி, அதீத வியர்வை மற்றும் தாடை வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இனப்பெருக்கம்: ஒரு பெண்ணின் குழந்தைப்பேறும் இதய பிரச்னைக்கு வழிவகுக்கும். கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் நீரிழிவு போன்ற பல்வேறு பிரச்னைகள் உருவாகும். இது இதயநோய்க்கு வித்திடும்.
இதய பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி?
ஆண் மற்றும் பெண்களுக்கிடையே மாரடைப்புக்கான அறிகுறிகள் வேறுபட்டிருந்தாலும் இருபாலரும் ஒரேமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். வாழ்க்கைமுறையில் மாற்றம், உணவு பழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சி போன்றவற்றால் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கமுடியும்.