கிளர்ச்சிப் படையுடன் தீவிர சண்டை: தலிபான்களுக்கு அதிக இழப்பா?- பஞ்ச்ஷிர் அப்டேட் பார்வை

கிளர்ச்சிப் படையுடன் தீவிர சண்டை: தலிபான்களுக்கு அதிக இழப்பா?- பஞ்ச்ஷிர் அப்டேட் பார்வை
கிளர்ச்சிப் படையுடன் தீவிர சண்டை: தலிபான்களுக்கு அதிக இழப்பா?- பஞ்ச்ஷிர் அப்டேட் பார்வை
Published on

ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கும், தேசிய கிளர்ச்சிப் படைக்கும் இடையிலான மோதலில் 350 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மைத் தன்மை என்ன, மோதலின் பின்னணி என்னவென்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றியிருக்கும் நிலையில், காபூலின் வடகிழக்கில் 100 கிமீ தொலைவில், பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. பஞ்ச்ஷிர் பகுதியை பல ஆண்டுகளாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வருகிறது 'வடக்கு கூட்டணி' அல்லது ஐக்கிய இஸ்லாமிய முன்னணி.

மறைந்த ஆப்கானிஸ்தான் அரசியல்வாதி அஹ்மத் ஷா மசூத், இந்த வடக்கு கூட்டணிக்கு மட்டுமில்லாமல், பஞ்ச்ஷிர் மாகாணத்துக்கும் 'காட்ஃபாதர்' ஆக இருந்தவர். இப்போது இவரின் மகன், அஹ்மத் மசூத் தலைமையில் தற்போது 'வடக்கு கூட்டணி' செயல்பட்டு வரும் நிலையில், இவர் அஷ்ரப் கானி அமைச்சரவையில் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே உடன் தலிபான்களை எதிர்க்க கைகோத்துள்ளார். இவர்கள் 'தேசிய கிளர்ச்சி படை' என்கிற பெயரில் புதிய படையை ஒருங்கிணைத்துள்ளனர். இந்தப் படையில், வடக்கு கூட்டணியுடன் ஆப்கான் ராணுவத்தின் முன்னாள் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

'தேசிய கிளர்ச்சி படை' - 'தேசிய கிளர்ச்சி படை' என்பது 10,000 - 15,000 வீரர்களைக் கொண்ட பல இனப் படையாகும். என்றாலும் இதனை வழிநடத்தும் அஹ்மத் மசூத் மற்றும் அம்ருல்லா சலே இருவரும் தாஜிக் இனத்தவர்கள். இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசியல் அமைப்பை அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறது. "அனைத்து குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம், குடிமக்களின் இனம் மற்றும் பாலினப் பாகுபாட்டை பொருட்படுத்தாமல் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று கூறி ஜனநாயகமான அமைப்பு அமைய வேண்டும் என்றுள்ளார் அஹ்மத் மசூத்.

அஹ்மத் மசூத்

இதனிடையே, நேற்று முன்தினம் இருந்து பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் இருந்தவரை, தலிபான்கள் - வடக்கு கூட்டணி என இரண்டு அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருந்ததால் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைய, இறுதியில் சண்டை மூண்டுள்ளது.

தற்போது என்ன நடக்கிறது? - ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தலிபான்கள், பஞ்ச்ஷிர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்று வருகின்றனர். முதலில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நினைத்தவர்கள், வடக்கு கூட்டணியுடனான பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து போர் மூலம் தீர்வு எட்ட முயன்று வருகின்றனர். அதன்படிதான் தற்போது தேசிய கிளர்ச்சி படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டை தற்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இரு தரப்பும் சண்டையில் முன்னிலை வகிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

என்றாலும், முதலில் தலிபான்கள்தான் தாக்குதலை தொடங்கியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் குல்பகார் பள்ளத்தாக்கு வழியாக ஊடுருவிய தலிபான்கள்தான் எதிர்ப்புப் படையை தாக்கியிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. தற்போது தலிபான்கள் இரண்டு முனைகளில் இருந்து வடக்கு கூட்டணியை எதிர்த்து போரிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

யார் முன்னிலையில் இருக்கிறார்கள்? - தலிபான்கள் தரப்பில், மாகாணத்தின் ஷுத்துல் மாவட்டத்தின் மையப்பகுதியையும், 11 புறக்காவல் நிலையங்களையும் கைப்பற்றி இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், எதிர்ப்புப் படைக்கு பெருத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். தலிபானின் கலாசார ஆணையத்தின் உறுப்பினர் இனாமுல்லா சமங்கனி என்பவர் டோலோ நியூஸ் செய்தி தளத்துக்கு பேசுகையில், எதிர்ப்புப் படையைச் சேர்ந்த 34 பேரை கொலை செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், ஷுத்துல் மாவட்டத்தில் தங்கள் படைகள் முன்னேறிவிட்டதாக ஒரு வீடியோவை பகிர்ந்துகொண்டுள்ளது தலிபான்.

அதேநேரத்தில், அஹ்மத் மசூத்துக்கு விசுவாசமான தேசிய கிளர்ச்சிப் படையை சேர்ந்தவர்களோ, தலிபான்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். ``கடந்த நான்கு நாட்களில் நடந்த மோதல்களில் 350 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 290 பேர் காயமடைந்தனர்" என்று எதிர்ப்புப் படையை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஃபாஹிம் தஸ்தி என்பவர் பேட்டியளித்துள்ளார்.

``வியாழக்கிழமை இரவு, தலிபான்கள் ஜபல் சிராஜ் மலை வழியாக ஷுத்துல் மாவட்டத்திற்குள் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன. இறந்தவர்களில் 40 உடல்களை மட்டுமே எடுத்துச் சென்றது தலிபான்கள் அமைப்பு. மற்ற உடல்களை அப்படியே விட்டுவிட்டனர்" என்று ஃபாஹிம் தஸ்தி கூறியிருக்கிறார்.

பஞ்ச்ஷிரை கைப்பற்றுவதால் தலிபான்களுக்கு என்ன பயன்? - ஆப்கானிஸ்தான் அனைத்து ஆப்கானியர்களுக்கும் தாயகம் என்று அறிவித்துள்ள தலிபான்கள், `தேசிய கிளர்ச்சிப் படை' எங்களின் உத்தரவாதங்களை நம்பவில்லை. இதனால் அனைத்து ஆப்கானிஸ்தான் மக்களின் விடுதலைக்காக தலிபான் அமைப்பு தொடர்ந்து போராடும் என்று அறிவித்திருக்கிறது.

ரத்தினங்கள் மற்றும் தாதுக்களுக்கு புகழ்பெற்ற பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றும் பட்சத்தில் தலிபான்களுக்கு அது ஒரு பொக்கிஷமாகும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அஷ்ரப் கானி தலைமையிலான முந்தைய ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டத்தை தலிபான்கள் சட்டவிரோத போதை மருந்துகள் விற்பனை, மிரட்டி பணம் பறித்தல், நன்கொடைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ரகசிய நிதி மூலம் நிதி நிர்வகித்தனர். ஆனால், தற்போது ஆட்சி பொறுப்பை ஏற்கவிருக்கும் தலிபான்களுக்கு அரசாங்கத்தை நடத்த பெரிய நிதி தேவை. இதனால் தாதுக்கள் நிறைந்த பஞ்ஷிர் மாகாணத்தை கைப்பற்றும்போது அது தலிபான்களுக்கு நீண்டகால வருவாயை கொடுக்க முடியும் என்று நம்புகிறது. மேலும், வடக்கு கூட்டணியை அடக்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தலிபான் அமைப்பு இதனை சரியான தருணமாக கருதி உள்நாட்டு போரை துவங்கியிருக்கிறது.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், பொருளாதார ரீதியில் தாலிபான்கள் முன்நிற்கும் சவால்கள் தான் இப்போது மிகப்பெரிய ஐயப்பாடுகளை எழுப்பியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

- மலையரசு

தகவல் உறுதுணை: BBC, The Tribune

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com