மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் இளம் வயது பிரதமர் பெருமையும் இந்தியாவின் பிரதமராக பொறுப்பெற்ற நேரு குடும்பத்தின் கடைசி பிரதமர் என்ற சிறப்புக்களுக்கும் உரியவர் ராஜீவ் காந்தி. தனது 40 வயதிலேயே பிரதமராக பொறுப்பேற்ற உலகின் இளம் தலைவர்களில் ராஜீவ் காந்தியும் ஒருவர். இதன்மூலம் இந்திய அரசியலில் இளைஞர்கள் நுழைய நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.
1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஃபெரோஸ் காந்தி- இந்திரா காந்தி தம்பதியின் இளைய மகனாக பிறந்தார் ராஜீவ் காந்தி. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அவருக்கு வயது மூன்று. பள்ளிப்படிப்பையெல்லாம் இந்தியாவில் முடித்தவருக்கு பொறியியல் மீதுதான் காதல். அதனால், மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர், பைலட் ஆக விமானத்தில் பறக்க விரும்பியவர் இந்தியா திரும்பி டெல்லியில் அதுகுறித்த நுழைவுத்தேர்வில் பாஸ் செய்து ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான ஓட்டியாகவும் பணிபுரிந்து வந்தார்.
ராஜீவ் காந்தி கேம்ப்ரிட்ஜில் படித்துக்கொண்டிருந்தபோதுதான், அதே கேம்ப்ரிட்ஜ்ஜில் படித்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆங்கிலத்துறை மாணவி சோனியாவை காதலித்தார். கேம்ப்ரிட்ஜ் அவர்கள் காதலுக்கான கேம்பஸ் ஆகியது. சாதி, மதம், மொழி கடந்தது ராஜீவ் சோனியா காதல். பெற்றோர் சம்மதத்தோடு கடந்த 1968 ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையை துவங்கினார்கள். பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் திருமணத்திற்குப் பிறகும் ராஜீவ் காந்திக்கு ஆர்வம் என்பதோ அறிவியல் மீதும் விமானத்தின் மீதும்தான் இருந்தது. அவரது நூலகம் முழுக்க அறிவியல், பொறியியல், விமானம் சார்ந்த புத்தகங்கள்தான் இருந்தன.
ஆனால், 1980 ஆம் ஆண்டு அவரது சகோதரர் சஞ்சை காந்தியின் மறைவுக்குப் பிறகு அறிவியல்வாதியான ராஜீவ் காந்தியை அரசியல்வாதியாய் மாற்றியது வரலாறு. அவரின் அண்ணன் சஞ்சய் காந்தி மறைவுக்குப்பிறகு, அவர்கள் குடும்பத் தொகுதியான, அதே உத்திரபிரதேசத்தின் அமேதியில், நடந்த இடைத்தேர்தலில் அமோகமாய் வெற்றி பெற்றார். அதன்பிறகு, அவரது அம்மா இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு தனது பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டபோது கட்சியின் தலைமையைப் பொறுப்பை ஏற்றார்.
நேரு காலத்தில் எப்படி பொதுத்துறை நிறுவனங்களும் தொழில்துறையும் வளர்ந்ததோ, அதேபோலத்தான் ராஜீவ் காந்தி காலத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்தது. தொழில்நுட்பத்தால்தான் வறுமையை விரட்டமுடியும் என்று உறுதியாக நம்பினார். இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் ஏற்பட்ட போர்களின்போதும் அமைதிக்காக குரல் கொடுத்தவர் ராஜீவ் காந்தி. இன்று உலகம் முழுக்க இந்தியர்கள் கணினித்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் ராஜீவ் காந்திதான். அவரது காலத்தில்தான் டிஜிட்டல் மயம் வந்தது.
கிராமப்புற பகுதிகளுக்கும் தொலைதொடர்பில் பி.சி.ஓ டிஜிட்டல் முறையை கொண்டு வந்ததோடு, அதற்கான அமைப்பையும் ஏற்படுத்தினார். அந்த அமைப்பால்தான் இன்று நாம் செல்போன்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இவர், காலத்தில்தான் சுற்றுச்சூழலுக்கென்று தனி அமைச்சகமும் தனித்துறையும் கொண்டு வரப்பட்டது. கட்சித் தாவல் தடைச்சட்டமும் இயற்றப்பட்டது.
இந்தியாவில் இரயில்வே டிக்கெட்டுகள் கணினிமயமக்கப்பட்டது, இவரது காலத்தில்தான். இளைஞரான ராஜீவ் காந்தி இளைஞர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவப்படுத்த வாக்களிக்கும் வயதை 21 வாயதிலிருந்து 18 ஆக குறைத்தார். அதேபோல சிறப்புமிக்க பஞ்சாயத்துராஜ் சட்டமும் இவரது காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. சிறப்புமிக்க நவோதயா பள்ளிகளும் இந்தியா முழுக்கத் துவங்கப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நவீனமயமாக்கப்பட்டது.
இந்திரா காந்தியின் மறைவுக்குப்பிறகு நடந்த பொதுத்தேர்தலில் இந்தியா முழுக்க 250 இடங்களுக்குச் சென்று மக்களோடு மக்களாக பிரச்சாரம் செய்தார். ஆனால், அவரது எளிமையே அவரது இறப்புக்கும் காரணமாய் அமைந்தது. அந்த துயரத்தை நாடும் மறக்காது; தமிழ்நாடும் மறக்காது. தமிழ்நாட்டிகே ஏற்பட்ட அந்த இழுக்கால் இப்போதும் தமிழகம் தலைகுனிந்துகொண்டுதான் இருக்கிறது. அவர் மறைந்தாலும், இந்தியாவில் செல்போன்கள் மற்றும் கணினியை ஒவ்வொருநாளும் பயன்படுத்தும்போதும் ராஜீவ் காந்தி நினைவுகூறப்பட்டுக் கொண்டேதான் இருப்பார்.
- வினி சர்பனா