எழுத்துத் துறையில் வெறுப்பில்லாமல் வாழ முடியாது: பிரபஞ்சன்

எழுத்துத் துறையில் வெறுப்பில்லாமல் வாழ முடியாது: பிரபஞ்சன்
எழுத்துத் துறையில் வெறுப்பில்லாமல் வாழ முடியாது: பிரபஞ்சன்
Published on

எழுத்துத் துறையில் வெறுப்பில்லாமல் வாழ முடியாது என்று எழுத்தாளர் பிரபஞ்சன் கூறினார்.

கடந்த 55 வருடங்களாக எழுதி வரும் எழுத்தாளர் பிரபஞ்சனுக்குப் பாராட்டு விழாவும் நிதியுதவி அளிக்கும் விழாவும் சென்னையில் நேற்று நடந்தது. அதில் பிரபஞ்சனுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. விழாவில் பாண்டிச்சேரி முதல்வர் நாராயண சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, இயக்குனர் மிஷ்கின், நடிகர் சிவகுமார், ஓவியர் மணியம் செல்வம், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், பவா.செல்லத்துரை, டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்புரை நிகழ்த்திய பிரபஞ்சன் கூறியதாவது:

சென்னையில் எல்லா இடங்களிலும் வாழ்ந்திருக்கிறேன். நான் அறியாத பேட்டை இல்லை. பேட்டைகளும் என்னை அறியும். நான் ஸ்டார் தியேட்டர் பக்கம் கொஞ்ச காலம் வசித்தேன். அப்ப செகண்ட் ஷோ பார்த்துட்டு போகும்போது, எழுத்தாளர் பிரபஞ்சன் இங்கதான் இருப்பான்னு சொல்வான். இங்கயா இருக்காரு? ஆமான்னு சொல்வான். வா போய் பார்த்துட்டு வருவோம்னு வருவான். எப்ப? செகண்ட் ஷோ சினிமா பார்த்துட்டு வீட்டுக்குப் போகும்போது. சரின்னு வந்து கதவை தட்டுவான். இந்த நேரத்துல யாரு வந்து கதவை தட்டுவா?ன்னு பயத்தோட திறந்தால், ரெண்டு பேர் நிற்பாங்க. என்னன்னு கேட்பேன். சும்மாதான், இந்த நேரத்துல எழுத்தாளர் என்ன பண்ணுவார்னு பார்க்க வந்தோம்னு சொல்வான்.

1961-ல் கதை எழுத ஆரம்பித்தேன். எனது முதல் சிறுகதை, கவிதை, கட்டுரை அப்போதுதான் வெளியானது. இதற்கு காரணம் எனது தமிழாசிரியர். நல்ல எழுதறியேன்னு செய்யுள் எழுத வைத்தார். அப்பலாம் செய்யுள் எழுதினால்தான் கவிஞர். இன்னைக்கு அது தெரியலைன்னாதான் நல்ல எழுத்தாளர்.

மனிதர்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. பிறக்கும்போதே யாரும் குற்றவாளியாகப் பிறப்பதில்லை. எது குற்றம், எது குற்றமில்லை என்பதை யார் தீர்மானிப்பது? தமிழ் எழுத்துத் துறையில் வெறுப்பில்லாமல் வாழ முடியாது.

எனக்கு ஒரு சவுகரியமான வாழ்க்கை கிடைத்திருந்தால், இன்னும் சிறப்பான கதைகளை எழுதியிருப்பேன். எனக்கு அந்த வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் குறிப்பிடத்தக்க கதைகளை எழுதியிருக்கிறேன். இங்கே எனக்கு நடக்கிற இந்த விழாவை பத்து வருடமாக வேண்டாம்னு சொன்னேன். எஸ்.ராமகிருஷ்ணன் விடாமல் துரத்தி இதை சம்மதிக்க வைத்துவிட்டார். என்னை வைத்துக்கொண்டு பாராட்டுவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் அது சமூகக் கடமை. ஏன் கடமை என்றால், கலைஞன் ஒருவன்தான் தன்னைப் பற்றி சிந்திக்காமல் சமூகம் குறித்து சிந்திக்கிறான். அதனால்தான் கடமைப்பட்டிருக்கிறது.

இவ்வாறு பிரபஞ்சன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com