பரங்கிமலை ரயில் விபத்து: நம் உயிர் மேல் நமக்கு அக்கறை இல்லை

பரங்கிமலை ரயில் விபத்து: நம் உயிர் மேல் நமக்கு அக்கறை இல்லை
பரங்கிமலை ரயில் விபத்து: நம் உயிர் மேல் நமக்கு அக்கறை இல்லை
Published on

“படிக்கட்டுல தொங்காத தம்பி, உள்ள வந்து நில்லு” - பேருந்திலோ, ரயிலிலோ நீங்கள் அடிக்கடி செல்பவராக இருந்தால் இந்த வார்த்தை உங்கள் காதுகளில் ஒலித்திருக்கும். ஆனால் அந்தக் கால்கள் எப்போதும் இதனை ஆமோதித்தது இல்லை. தலையை கோதிக் கொண்டு சத்தமாக பேசிக் கொண்டே செல்லும் இயல்பு அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. படியில் பயணம், நொடியில் மரணமோ, தொங்கிக் கொண்டு செல்வதை தவிர்க்கவும் என்ற வார்த்தைகளையோ  படித்ததும் மறக்கும் மறதி அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. ரயிலில் ஏற பெரியவர்களுக்கும் பெண்களுக்கும் இடம் கொடுக்கும் அந்த நல்ல மனங்களுக்கு நாமும் உள்ளே சென்றால் என்ன என்ற சிந்தனை எப்போதும் வருவதேயில்லை. 

இன்று நடக்க கூடிய பெரும்பாலான விபத்துகளுக்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே தான் காரணம். ஒன்று அவசரம். இன்னொன்று அலட்சியம் .ஓடும் பேருந்து நிற்பதற்குள் ஓடி சென்று சீட்டில் இடம் பிடிப்பது… ரெட் சிக்னல் போட்டாலும் நிறுத்தாமல் வாகனத்தை செலுத்துவது…
வாகனம் ஓட்டும் போது செல்ஃபோன் பேசிக்கொண்டே கவனத்தை சிதறவிடுவது … ரயில்நிலைய மேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை  கடப்பது.. படிகளில் தொங்கி கொண்டே பயணம் செய்வது.. பரபரப்பான சாலையில் அடுத்தவரை பயமுறுத்தும் வகையில் வேகமாக வண்டி ஓட்டுவது.. வாகனத்தை முந்தி செல்ல போட்டி போடுவது  என ஒரு நாளைக்கு எத்தனையோ போக்குவரத்து விதமீறல்கள் நடந்துக் கொண்டு இருக்கின்றன. அத்தனை வீதிமீறல்களுக்கும் காரணம் ஒன்று; அவசரமாக இருக்கும் அல்லது அலட்சியமாக இருக்கும்.


 
சிலர் போக்குவரத்து காவலர்களை கண்டால் மட்டும் ஹெல்மெட் போடுவார்கள். சிலர் சிக்னல் பகுதி வந்துவிட்டாலே வேகமாக வாகனத்தை இயக்குவார்கள். எங்கே சில வினாடிகள் நிற்க வேண்டி வருமோ என்று சிலர் ஹெல்மேட் போடுகிறார்களோ இல்லையோ? ஹெட்செட் போட்டு கொண்டு போவார்கள். இப்படியான சமயங்களில் விபத்துகள் ஏற்படும் போது மட்டும்தான் அதன் விளைவை சம்மந்தப்பட்டவர்கள் உணர்கிறார்கள். பேருந்தில் ஓடி சென்று சீட் பிடிப்பதாலோ சிக்னலில் நிற்காமல் செல்வதாலோ நாம் என்ன சாதித்து விட போகிறோம். நம் உயிரை காட்டிலும் நமக்கு என்ன பெரிதாக கிடைத்து விட போகிறது. இதை யாரும் உணராமல் இல்லை ஆனால் அந்த நேரத்தில் அவசரத்தில் அதை யாரும் உணர்வதில்லை. எப்போதுமே நாம் சரியாகதான் இருக்கிறோம் என்ற அசட்டு நம்பிக்கை; அலட்சியம் என்றாவது ஒருநாள் பேராபத்தில் முடிகிறது. 


 
இன்று நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் எத்தனை எத்தனை கனவுகளுடன் வளர்ந்திருப்பார்கள். அவர்களின்  எதிர்காலம் பற்றி அந்தக் குடும்பம் என்னவெல்லாம் சிந்தித்திருக்கும். ஆனால் அத்தனையும் இருண்டுவிட்டது இமை மூடித் திறப்பதற்குள்.  இந்த விபத்தை பொருத்தவரையில் கோடம்பாக்கம்- சைதாப்பேட்டை மின்சார ரயில் வழித்தடத்தில் அறுந்த விழுந்த மின் கேபிளோ… எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் மின்சார ரயிலை இயக்கியதோ… கூட்ட நெரிசலோ… பரங்கிமலை ரயில்வே தடுப்புச்சுவரோ…கூடுதல் ரயிலை இயக்காததோ … இப்படி காரணங்கள் எதுவாக இருந்தாலும்  நம் உயிர் மேல் நமக்கு அக்கறை இல்லாமல் போனது தான் முதன்மையான காரணமான இருக்க முடியும்.

ஒரு தனி மனிதனுக்கு அவன்மேல் அவனுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டிலும் நாம் குறை சொல்லும் அரசாங்கத்திற்கோ அதிகாரிகளுக்கோ இருந்து விடமுடியாது. இன்று ஆபத்தை உண்டாக்கிய தடுப்புச்சுவரை அகற்றப்படலாம். ஆனால் ஆபத்தான பயணத்தை நாம் எப்போது தவிர்க்க போகிறோம் ! ஆபத்தான பயணம் செய்வதுதான் ஒரு விஷயத்தையோ ஒரு இடத்தையோ அடைய வேண்டி நிலை உள்ளது என்றால் அப்படிப்பட்ட பயணத்தை ஏன் மேற்கொள்ள வேண்டும்? மனிதனின் வாழ்க்கை மிகவும் சிறியது; அதை இன்னும் சுருக்கி கொள்ள வேண்டாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com