‘விருது கிடைச்சாச்சு.. விசா கிடைக்கல’: அமெரிக்கா செல்ல முடியாமல் தவிக்கும் அரசுப்பள்ளி மாணவி.!

‘விருது கிடைச்சாச்சு.. விசா கிடைக்கல’: அமெரிக்கா செல்ல முடியாமல் தவிக்கும் அரசுப்பள்ளி மாணவி.!

‘விருது கிடைச்சாச்சு.. விசா கிடைக்கல’: அமெரிக்கா செல்ல முடியாமல் தவிக்கும் அரசுப்பள்ளி மாணவி.!
Published on

வாஷிங்டன்னில் நடைபெறவுள்ள சர்வதேசக் கருத்தரங்கில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவி அமெரிக்கா பறக்க உள்ளார்.

மாதவிடாய் காலம் என்பது பெண்களுக்கு துயர காலம். அவர்கள் சந்திக்கும் அயற்சி மிக்க ஓர் அனுபவமாகவே கடந்து போகும். அதைப்பற்றி விவரிப்பது என்பது நமக்கு ஒரு தகவலாகத்தான் பதிவாகும். ஆனால் அனுபவிக்கும் பெண்களுக்குத்தான் தெரியும் அதன் வலியும், அது சார்ந்த உளவியல் பிரச்னைகளும். அதிலும் பூப்பெய்த புதிதில் பெண் குழந்தைகள் சந்திக்கும் மனஉளைச்சல் சொல்லி மாளாது. அச்சம், வலி, மனப்பதட்டம், சடங்கு சாங்கியம் என்ற பெயரில் வீட்டில் இருப்பவர்களின் அணுகுமுறை என அந்தக் காலகட்டம் ஒரு விநோதமாகவே வந்து போகும்.

அப்படி ஒரு அனுபவத்தை உடல் ரீதியாகவும் மனதளவிலும் சந்தித்த  8-ம் வகுப்பு மாணவி பானுப்பிரியா. இவரது தந்தை சதாசிவம் வெளிநாட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். தாய் கோமதியுடன் காளாச்சேரியில் பானுப்பிரியா வசித்து வருகிறார். பானுப்பிரியா மாதவிடாய் குறித்த பிரச்னைகளை ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்க, அதை அப்படியே ஏற்றுக்கொண்ட சர்வதேச அமைப்பு ஒன்று அவருக்கு பரிசையும் கொடுத்து வாஷிங்டனுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் அகில இந்திய அளவில் கல்வி மற்றும் சமுதாய செயல் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியை நடத்தியது. இந்த ஆண்டு வரப்பெற்ற 4,300 பள்ளிகளைச் சேர்ந்த அறிக்கைகளில், 19 மட்டுமே சிறந்தவையாகத் தேர்வு செய்யப்பட்டன. இதில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் ஒன்று. இதில்தான் பானுப்பிரியா 8-ம் வகுப்பு படிக்கிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 28-ம் தேதி டெல்லி குர்கானில் நடந்த நேர்காணலில் பானுப்பிரியா சமர்ப்பித்த “மாதவிடாயும் மூட நம்பிக்கைகளும்” என்ற செயல் திட்ட அறிக்கை தனிப்பிரிவில் முதலிடத்தை பிடித்தது. இதற்காக ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் தங்கப் பதக்கம் வழங்கியதுடன் அமெரிக்காவின் வாஷிங்டன்னில் நடைபெறவுள்ள சர்வதேசக் கருத்தரங்கில் பங்கேற்கவும் பானுப்பிரியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக வரும் ஏப்ரல் 26-ம் தேதி டெல்லியில் இருந்து வாஷிங்டன் பறக்கிறார் பானுப்பிரியா.

பானுப்பிரியா கூறும்போது, “ஆங்கில ஆசிரியர் ஆனந்த் மூலமாக இந்தப் போட்டியில் பங்கேற்றோம். கடந்த 6 மாதமாக எதிர்கொண்டு வரும் இந்த மாதவிடாய் நாட்களை நினைத்தாலே எனக்குள் ஒருவித அச்சமும், பயமும் தொற்றிக்கொள்கிறது. அதுபோன்ற நாட்களில் என்னை குடும்பத்தாரும் மற்றவர்களும் நடத்தும் விதம், குறிப்பாக பெண்களே மூட நம்பிக்கைகளை சாமிகளின் பெயரால் நடைமுறைப்படுத்துவதையும் எனது அறிக்கையில் பதிவு செய்தேன். நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு எளிதில் பதிலளித்தேன். நான் எதிர் கொண்டு வரும் பிரச்சினை என்பதால் என்னால் எளிதாக பதிலளிக்க முடிந்தது. என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு நன்றி” என்று கூறினார்.

இதுகுறித்து ஆசிரியர் ஆனந்த் கூறியபோது, “இந்த வெற்றிக்கு முதல் காரணமாக அமைந்திருப்பது ஆங்கில மொழியில் பேசும் திறன்தான். இதற்கான பயிற்சியை 7 ஆண்டுகளாக எங்கள் பள்ளியில் செய்து வருகிறோம். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக தங்கப்பதக்கம் வென்று வருகிறோம். எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவருமே விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகள்தான். அவர்களுக்கு முறையான பயற்சி அளித்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் செய்து வெற்றிபெறச் செய்கிறோம். அவர்களும் வெற்றிபெறுவதுடன் பள்ளியையும் மேம்படுத்தியுள்ளனர்” என்கிறார் பெருமையுடன். மேலும் வாஷிங்டன் செல்ல இதுவரை விசா கிடைக்கவில்லை என்றும் அதனை பானுப்பிரியாவிற்கு விரைந்து கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com