நிறுத்தப்படுகிறதா 'தாலிக்குத் தங்கம்' திருமண உதவி திட்டம் ? - பட்ஜெட்டில் 'ஷாக்' அறிவிப்பு

நிறுத்தப்படுகிறதா 'தாலிக்குத் தங்கம்' திருமண உதவி திட்டம் ? - பட்ஜெட்டில் 'ஷாக்' அறிவிப்பு
நிறுத்தப்படுகிறதா 'தாலிக்குத் தங்கம்' திருமண உதவி திட்டம் ? - பட்ஜெட்டில் 'ஷாக்' அறிவிப்பு
Published on

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டம் எனப்படும் 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது' என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சமூக நலத்துறையின் கீழ் வெளியான அறிவிப்புகளில் 'இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்' திட்டம் மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது  



தமிழக பட்ஜெட்டின் 83 வது எண்ணில் வெளியாகியுள்ள அந்த அறிவிப்பில், "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்விச் சேர்க்கை மிக குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு,தொழிற் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். கல்வி உதவித்தொகை பெற்றாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம், இதன் மூலம் 6 லட்சம் மாணவிகள் பயன்பெற வாய்ப்புள்ளது.இதற்காக 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், "ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம் ஆகியவை எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது .



தாலிக்குத் தங்கம் எனப்படும் திருமண நிதியுதவித்திட்டம் தமிழகத்தில் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திட்டமாக உள்ளது. இந்த திட்டம் மூலமாக பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வந்தது. 10 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வந்தது. இன்று தமிழக பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பின் மூலமாக இத்திட்டம் இனி நிறுத்தப்படும் சூழல் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com