நாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா !

நாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா !
நாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா !
Published on

பேரிடம் சமயங்களில் பத்திரிகையாளர்கள் அழிவின் உச்சத்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். அப்போது சில பத்திரிகையாளர்கள் மட்டும் நேர்மறையான, நம்பிக்கை தரும் செய்திகளை தேடிக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் மீட்பு பணியில் ஈடுபடுபவர்களையும், பாதிப்புக்கு ஆளானவர்களையும் அந்த செய்திகள் உத்வேகப்படுத்தும். கேரளாவின் திருச்சூர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு மனதை உருக்கும் செய்தி இன்று. 

சுனிதா. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு யாரும் மீட்க வர மாட்டார்களா என உதவி தேடி தனது வீட்டில் இருந்தார். ஒவ்வொரு நிமிடமும் நீரின் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. சுனிதாவுக்கு பயம். திடீரென குரல் கேட்கிறது. யாரேனும் இருக்கிறீர்களா என தொடர்ந்து குரல் கேட்க, சுனிதா பதில் கொடுக்கிறார். கிளம்புங்கள் செல்லலாம், தண்ணீர் முழுவதும் சூழ்ந்துவிடும் என மீட்க வந்தவர்கள் அவசரப்படுத்துகிறார்கள், ஆனால் சுனிதாவிடம் இருந்து பதில் இல்லை. ஏன் பதில் பேச மறுக்கிறீர்கள் என மீட்புப் படையினர் கேட்க , ஒரு அறையில் சாக்குகளை கொண்டு போர்த்தி பாதுகாக்கப்பட்ட 25 நாய்களை காட்டுகிறார் சுனிதா. 

மீட்க வந்தவர்களோ இப்போது நாய்களை எல்லாம் மீட்கும் அளவுக்கு எங்களிடம் உபகரணங்கள் இல்லை, நீங்கள் மட்டும் வாருங்கள், விலங்கு அமைப்புகளிடம் உடனடியாக சொல்லி மீட்க சொல்வோம் என்கிறார்கள். ஆனால் சுனிதாவோ அவரக்ளை அனுப்பி விட்டு, நாய்களோடு தங்குவது என முடிவெடுத்து விடுகிறார். நாய்களை மீட்க ஆட்களை அனுப்புங்கள் என அவர்களிடம் சொல்ல, அவர்கள் செல்லவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் அங்கிருந்து கிளம்புகின்றனர். வந்தவர்கள் சென்றதுதான் தாமதம் சுனிதாவின் வீட்டில் தண்ணீர் புக ஆரம்பித்தது. தடுப்புகளை வைத்தும் , கதவுகளை பூட்டியும் தடுக்க பார்த்தார்.

ஒருவழியாக சுனிதாவின் கோரிக்கை கேரளாவின் உள்ள விலங்குகள் நல அமைப்புக்கு சென்றது. அனைத்து நாய்களையும் மீட்க ஆள் அனுப்பினார்கள். படகுகள் வந்தது. 25 நாய்களோடு சுனிதா பத்திரமாக மீட்கப்பட்டார். இத்தனை நாய்களையும் எப்படி வளர்த்தீர்கள் என அதிகாரிகள் ஆச்சரியத்தோடு கேட்டனர். எல்லாமே தெரு நாய்கள், சில கைவிடப்பட்ட நாய்கள் என்றார் சுனிதா. வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட 2 நாய்களையும் கூட மீட்டு , தனது வீட்டில் சேர்த்துக் கொண்டாராம். நாய்களை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த சுனிதா, கடைசியில் பத்திரமாக அவர் விரும்பியவாறே மீட்கப்பட்டார். 

( Courtesy : AFP )

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com