துணைநிலை ஆளுநர் அதிகாரத்திற்கு எதிராக வந்த தீர்ப்பு… நிலைப்பாட்டை மாற்றுமா மத்திய உள்துறை?

துணைநிலை ஆளுநர் அதிகாரத்திற்கு எதிராக வந்த தீர்ப்பு… நிலைப்பாட்டை மாற்றுமா மத்திய உள்துறை?
துணைநிலை ஆளுநர் அதிகாரத்திற்கு எதிராக வந்த தீர்ப்பு… நிலைப்பாட்டை மாற்றுமா மத்திய உள்துறை?
Published on

டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில், துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து இன்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், துணைநிலை ஆளுநருக்கு தனித்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இல்லை எனவும், அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு அவர்கள் தடை போட முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவானது. ஆனால் மத்திய உள்துறையின் நிலைப்பாடு இதற்கு மாறாக இருந்து உள்ளது.

கடந்த மாதம் புதுச்சேரியின் முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் அதிகாரங்கள் குறித்த பல கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைத்தார், அந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய உள்துறை, ’துணைநிலை ஆளுநருக்கே அரசை விட அதிக அதிகாரம்’ என்பதாக அதில் கூறி இருந்தது. அந்தக் கேள்வி-பதில் பகுதி வாசகர்களுக்காக,

1. புதுவையில் பல்வேறு துறைகளில் அன்றாடப் பணிகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா?

யூனியன் பிரதேசப் பணிகள் சட்டம் 21(5)-ன்கீழ் எந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களையும் கேட்டுப்பெற அதிகாரம் உள்ளது. அதுமட்டுமன்றி, பிரிவு 21(5)கீழ் உள்ள அதிகாரங்கள்படி அதிகாரிகளுடன் நேரடியாக ஆளுநர் ஆலோசிக்க முடியும்.

2. துறை தொடர்பான முழுமையான கோப்பைப் பெற முடியுமா அல்லது செயலரிடம் இருந்து வெறும் ஆவணங்களை மட்டும் பெற முடியுமா?

முழு கோப்பையும் கேட்டுப் பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

3. அமைச்சரவை, சட்டப்பேரவை இருக்கும்போது ஆளுநர் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகுமா?

மாநில ஆளுநரைக் காட்டிலும் துணைநிலை ஆளுநருக்குப் பரவலான அதிகாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அமைச்சரவையின் அறிவுரை இன்றியும் செயல்படலாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் முடிவுக்குவிட வேண்டும். அவசரத் தேவை ஏற்பட்டால் ஆளுநரே உத்தரவிடலாம்.

4. தலைமைச் செயலகத்துக்கு அனுப்பாமல் தான் கையெழுத்திட்ட அரசாணையைச் செல்லாதது என ஆளுநரால் அறிவிக்க முடியுமா?

அரசாணையில் தனக்கு உடன்பாடில்லாத நிலையில், அதற்கு மாறாக துறைச் செயலரும், அமைச்சரும் தீர்மானித்தால் விதிகள் 50, 53-ன்படி பிரச்னையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.

5. நகரமைப்பு, துறைமுகத் துறை அதிகாரிகளை நேரடியாக அழைக்கலாமா? மனுக்களை முதல்வருக்கோ, அமைச்சருக்கோ, தலைமைச் செயலருக்கோ அனுப்பாமல் நேரடியாகத் துறை அதிகாரிக்கு அனுப்பலாமா? பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதுதல், அதிகாரிகள் பணிநீக்கம், ஆய்வுக் கூட்டத்துக்கு அழைக்க முடியுமா?

பிரிவு 21 (5)-ன்கீழ் துறைச் செயலரை அழைத்து எந்த ஆவணத்தையும், கோப்பையும் அளிக்க உத்தரவிடலாம்.

6. முதல்வர், அமைச்சர்களை அழைத்து அவர்கள் வகிக்கும் துறைகள் தொடர்பாக விவரங்களைப் பெற முடியுமா?

ஏதாவது சந்தேகம் இருந்தாலோ, விவரங்கள் தேவைப்பட்டாலோ முதல்வர், அமைச்சரிடம் விவரம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வந்துள்ள தீர்ப்பு துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை மறுவரையறை செய்வதாக உள்ளநிலையில், மத்திய உள்துறை தனது பதில்களை தானே மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அல்லது மத்திய அரசுத் தரப்பில் மேல் முறையீட்டுக்கும் வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com