தமிழ் சினிமாவை விடாமல் மிரட்டும் பேய்: தொடரும் பேயாட்டம்!

தமிழ் சினிமாவை விடாமல் மிரட்டும் பேய்: தொடரும் பேயாட்டம்!
தமிழ் சினிமாவை விடாமல் மிரட்டும் பேய்: தொடரும் பேயாட்டம்!
Published on

தமிழ் சினிமாவில் பேய் படங்களின் ஆதிக்கம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. 2016-ம் ஆண்டு அதிகப்பட்ச பேய் படங்கள் வெளியாகி மக்களைப் பயங்காட்டிய நிலையில், 2017-ல் அந்த எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருந்தன. இந்த வருடம் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பேய்ப் படங்கள் எடுப்பது எளிது. கதைக்கும் அதிகமாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு காதல் கொலை. கொலையாகும் பெண், ஆவியாக வந்து பழிவாங்குகிறாள். எப்படியெல்லாம் பழிவாங்குகிறாள் என்பது திரைக்கதை. இல்லையென்றால் ஒரு பாழடைந்த பங்களா. நாற்பது வருடத்துக்கு முன் கொல்லப்பட்ட ஒரு பெண், அங்குப் புதைக்கப்படுகிறாள். ஒரு கதவைத் திறப்பதன் மூலம் அவள் ஆவி, வெளியே வருகிறது. பிறகு தன்னைக் கொன்றவர்களை விரட்டி விரட்டி கொடூரமாகப் பழிவாங்குகிறது. 

இப்படி உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதெல்லாம் பேய்ப் படத்துக்கு ஓகேதான். ஏனென்றால் இதற்கு லாஜிக்கென்று எதுவும் தேவையில்லை. 

‘பேய்க் கதைகளுடன் கொஞ்சம் காமெடியையும் சேர்த்துவிட்டால் போதும், படம் கண்டிப்பாக ஹிட். அதற்கு பல படங்களை, உதாரணமாகச் சொல்ல முடியும். பேய், காமெடிக்கு லாஜிக் இன்றி, அதை எப்படியும் வைத்துக்கொள்ளலாம். அதோடு பட்ஜெட்டும் குறைவு. அரண்மனை என்றால் ஒரு செட் போதும். இல்லை என்றால் ஒரு பங்களா செட். மொத்த படத்தையும் அதில் முடித்துவிடலாம். பேய் நடமாட்டத்தை சி.ஜி.யில் கொஞ்சம் பிரமாண்டமாக காண்பித்தால் முடிந்தது படம். ரசிகர்கள் பயந்து ரசிக்க ரெடி’ என்கிறார் இயக்குனர் ஒருவர்.

’ராகவா லாரன்ஸ் ’முனி’யை இயக்கியபோதே, அந்த மாதிரியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக ஆதரவு கிடைக்கும் என்று நம்பினார். அந்த நம்பிக்கையில் அவர் அடுத்து எடுத்ததுதான், ‘காஞ்சனா’. நினைத்தது நடந்தது. அந்தப் படம் சூப்பர் ஹிட். இப்போது அதன் தொடர்ச்சியாக, படங்களை இயக்கி வருகிறார். ’காஞ்சனா 2’ வசூல் சாதனையில் மலைக்க வைத்தது. அடுத்து ’காஞ்சனா 3’ படத்தை எடுத்து வருகிறார். சுந்தர்.சி.யின் ’அரண்மனை’, ஜி.வி.பிரகாஷ் குமார் ஹிரோவாக அறிமுகமான ’டார்லிங்’ உட்பட பல பேய்ப்படங்களை, பேய் படங்களுக்கான ஹிட் லிஸ்டில் உதாரணமாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில் இந்த வருடமும் பேய்ப் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருக்கிறது’ என்கிறார் இயக்குனர் ஒருவர்.

பேய்ப்படங்களுக்கு மினிமம் கேரண்டி இருப்பதால், இந்த மாதிரி படங்களைத் தயாரிக்க பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். பேய்ப் படங்கள் நஷ்டத்தைச் சந்தித்தது, ரொம்ப குறைவுதான் என்கிறார்கள். அதனால், கடந்த வருடமே எடுத்து முடிக்கப்பட்ட த்ரிஷாவின் ’மோகினி’, செல்வராகவனின் ’நெஞ்சம் மறப்பதில்லை’, உருவாகிவரும், ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘தேவி 2’, ’கொலையுதிர் காலம்’, ‘இமைக்கா நொடிகள்’ உட்பட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பேய்ப்படங்கள் வரிசையில் நிற்கின்றன. 

’வாங்க, வந்து மிரட்டிப் பாருங்க’ என்று தைரியமாகவே காத்திருக்கிறார்கள் ரசிகர்களும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com