2017ஆம் ஆண்டில் தாய், தந்தையான திரைப்பிரபலங்கள்

2017ஆம் ஆண்டில் தாய், தந்தையான திரைப்பிரபலங்கள்
2017ஆம் ஆண்டில் தாய், தந்தையான திரைப்பிரபலங்கள்
Published on

2017ஆம் ஆண்டில் திரைப்பிரபலங்கள் சிலர் அப்பா, அம்மா என்ற குடும்பப் பொறுப்பை அடைந்துள்ளனர்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் கதாநாயகனாக நடித்து, பின்னர் பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் விஷ்ணு விஷால். இவருக்கும் இவரது மனைவி ரஜினிக்கும் இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இது அவர்களின் முதல் குழந்தை என்பதால் மகிழ்ச்சியில் எல்லைக்கு இருவரும் சென்றனர். அந்தக் குழந்தைக்கு தனது நண்பர் நடிகர் ஆர்யாவின் நினைவாக ஆர்யன் என்று விஷ்ணு பெயரிட்டார். அத்துடன் அந்தக் குழந்தையை நீச்சல் குளத்தில் விட்டு நீந்தவும் பழக வைத்தார். அந்தக் காட்சிகள் ட்விட்டரில் பரபரப்பாக பகிரப்பட்டன. விஷ்ணுவின் தைரியத்தை பலரும் பாராட்டினர்.

நெடுஞ்சாலை மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகர் ஆரி. அதன்பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும், இலங்கையை சேர்ந்த நதியாவுக்கும் கடந்த 2015ஆம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இவர்களுக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக இணையதளத்தில் பதிவிட்டிருந்த ஆரி, தான் தந்தை என்ற முக்கிய பொறுப்பு மற்றும் பெருமையை அடைந்துவிட்டதாக கூறியிருந்தார். அத்துடன் தனக்கு பெண் குழந்தை பிறந்ததால்தான் இரண்டு மடங்கு பெருமை அடைவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பல படங்களில் நடித்திருந்தாலும், சினிமா ரசிகர்கள் மத்தியில் ஜிகிர்தண்டா படத்திற்குப் பிறகு ‘சேது’ என்ற அடையாளத்தை பெற்றவர் பாபி சிம்ஹா. இவர் தன்னுடன் ‘உருமீன்’ படத்தில் நடித்த ரேஷ்மி மேனனை 2015ஆம் ஆண்டு மைலாப்பூரில் நிச்சயம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்தாண்டு மே 2ஆம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டிருந்த பாபி சிம்ஹா, தனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்தக் குழந்தைக்கு முத்ரா சிம்ஹா எனப் பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தங்களுக்கும், தங்கள் குழந்தைக்கும் வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி எனவும் அவர் கூறியிருந்தார்.

தமிழகத்தில் பலருக்கும் பிடித்த கதாநாயகியாக வலம் வந்தவர் அசின். இவர் கஜினி, போக்கிரி என பலப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தொழிலதிபர் ராகுல் சர்மாவை கடந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். ராகுல் சர்மா மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இந்த ஜோடிக்கு கடந்த அக்டோபர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே நடிகர் அக்‌ஷய் குமார் நேரில் சென்று இருவருக்கும் வாழ்த்து கூறினார். அத்துடன் ‘குட்டி அசின்’ உடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் அவர் வெளியிட்டிருந்தார். 

மலையாளத்தில் பிரபல நடிகராக உள்ள மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் நடித்து வரும் இவர், சென்னையை சேர்ந்த ஆர்கிடெக் மாணவி அமல் சுஃபியாவை கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு கடந்த மே 5ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதன்மூலம் நடிகர் மம்முட்டி தாத்தாவாகவும், துல்கர் அப்பாவாகவும் முன்னேற்றம் அடைந்தனர். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த துல்கர், தான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், தங்களது பல நாள் கனவு நினைவானதாகவும், தனக்கு அழகான இளவரசி பிறந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் தனது வாழ்க்கையில் மாற்றம் வந்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com