'பெற்றால்தான் பிள்ளையா ?': தத்தெடுப்பதில் சட்ட விதிமுறைகள் என்ன ?

'பெற்றால்தான் பிள்ளையா ?': தத்தெடுப்பதில் சட்ட விதிமுறைகள் என்ன ?
'பெற்றால்தான் பிள்ளையா ?': தத்தெடுப்பதில் சட்ட விதிமுறைகள் என்ன ?
Published on

"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்" இதற்கு தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள் என்பதுதான் இக்குறலின் அர்த்தம். அத்தகைய குழந்தைகளின் இனிமையையும் குழந்தை பேறு குறித்தும் திருவள்ளுவர் தன்னுடைய குறல்களில் கூறியுள்ளார். நமது முன்னோர்கள் 10 குழந்தைகளை பெற்று வளர்த்தனர். ஆனால், இப்போதோ குழந்தைப் பேறு என்பதே பல இளம் தம்பதிகளுக்கு கனவாக இருக்கிறது. ஆம், உண்மைதான் உதாரணத்துக்கு சென்னையில் இருக்கும் கருத்தரிப்பு மையங்கள் எண்ணிலடங்கா கணக்கில் பெருகியுள்ளதை காணலாம். நீங்கள் ஏதாவது ஒரு மையத்துக்கு உள்ளே சென்று பார்த்தால் அங்குப் பெரிய உணர்வுக் குவியல்களே கொட்டிகிடக்கும். கணவனும், மனைவியும் இம்முறையாவது குழந்தை பேறு கிடைக்குமா என ஏங்கி உட்கார்ந்து இருப்பார்கள். குழந்தை பேறுக்காக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.

குழந்தையின்மைக்கு பல்வேறு காரணங்கள் மருத்துவரீதியாக கூறப்படுகிறது. சில தம்பதியினருக்கு செயற்கை கருத்தரிப்போ அல்லது வேறு சிகிச்சை முறைகளில் குழந்தைப்பேறு சாத்தியமாகிறது. ஒரு சிலருக்கு இறுதிவரை குழந்தைப் பேறு சாத்தியமில்லாமலேயே போய்விடுகிறது. அப்படிப்பட்ட தம்பதியினர் இறுதியாக எடுக்கும் முடிவு குழந்தை தத்தெடுப்பே. பெரும் பணக்காரகளாக இருந்தாலும் சரி, நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும் சரி எல்லாம் கைவிட்ட பின்பு குழந்தை தத்தெடுப்பை நோக்கி நகர்வார்கள். ஆனால், பலருக்கும் குழந்தை தத்தெடுக்கும் முறைகள் குறித்து தெரிவதில்லை. குழந்தை இல்லாதவர்கள் அரசின் தொட்டில் குழந்தை திட்டத்திலிருந்தும், பல தனியார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்தும் சட்டப்படி குழந்தை தத்தெடுப்பை மேற்கொள்ளலாம்.

தமிழகத்தில் 1992 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொட்டில் குழந்தைகள் திட்டம் முதலில் பெரிய வரவேற்பை பெற்றது. இது வரை இந்த திட்டத்தின் மூலமாக (2019 வரை) மொத்தம் 5,239 குழந்தைகள் கிடைத்துள்ளன. முதல் 7 ஆண்டுகளில் மட்டுமே இத்திட்டத்தில் 3,279 குழந்தைகள் வந்தன. ஆனால், 1999 முதல் 2019 வரையிலான 20 ஆண்டுகளில் 1,963 குழந்தைகள் மட்டுமே வந்துள்ளன. இந்த குழந்தைகள் 18 வயது வரை அரசால் வளர்க்கப்படுவார்கள். இந்த குழந்தைகளை தத்து எடுக்க விரும்புபவர்கள் நேரடியாக இந்த மையங்களுக்கு சென்று இந்த குழந்தைகளை பார்வையிட்டு தத்து எடுக்க வாய்ப்பில்லை. இணையதளத்தின் வழியாகத்தான் விண்ணப்பித்து காத்திருக்க வேண்டும்.

இதனால் சட்டப்படி முறையாக குழந்தை தத்தெடுப்பு நடைபெறுவதில்லை. வறுமையால் வாடும் பலர் தங்கள் குழந்தைகளை பணத்திற்காக விற்கும் சம்பவங்களும் அடிக்கடி செய்திகளில் அகப்படுகிறது. பல இடைத் தரகர்கள் பெரும் பணக்காரர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு குழந்தைகளை விற்கின்றனர். இதில் உறவு முறையில் இருந்து குழந்தை தத்தெடுக்கும் முறை எளிதானது. ஆனால், இன்றையக் காலக்கட்டத்தில் இதனை யாரும் விரும்புவதில்லை. அரசுக் காப்பங்களில் இருந்து குழந்தை தத்தெடுப்பு எளிதான காரியமில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டியதாக நினைக்கிறார்கள்.

உண்மையில் குழந்தை தத்தெடுப்புக்கு அரசு வகுத்துள்ள சட்டம் பாதுகாப்பானதா? இல்லை குழந்தையற்ற தம்பதியினரின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடுகிறதா ? இது குறித்து மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறும்போது, “முன்பெல்லாம் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் குழந்தையை தத்தெடுக்கலாம் என்ற நிலை இருந்தது. முறையான சட்ட வழிமுறைகள் இல்லை. அப்போது பல வெளிநாட்டினர்கள் கூட நம் நாட்டில் குழந்தையை எளிதாக தத்தெடுக்க முடியும். இதனால் பல தவறுகள் நடந்தன. அதனால்தான் குழந்தை தத்தெடுப்புக்கு முறையான சட்டத் திட்டத்தையும் வழிமுறையையும் அரசு வகுத்தது. இப்போது Central Adoption Resource Authority மூலமாகவே முழு வெளிப்படைதன்மையுடன் இது நடைபெறுகிறது. இந்த நடைமுறைதான் தத்தெடுப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது" என்றார் அவர்.
பேருந்துகளில் கேமரா மட்டுமே போதுமானதா? - என்ன நிலையில் இருக்கிறது பெண்களின் பாதுகாப்பும்? நிர்பயா நிதியும்? 
அரசு காப்பகத்தில் இருந்து குழந்தைகளை தத்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்ன ?

குழந்தை தேவைப்படுபவர் யாராக இருந்தாலும் http://cara.nic.in/ இணையத்தின் வழியே மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும்.

விண்ணப்பம் பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும்.

குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியின் திருமண சான்றிதழ் தேவை. தம்பதியினர் இருவரின் வயது சான்றிதழ் தேவை.

தம்பதியரில் யாருக்கேணும் 45 வயதுக்கு மேல் இருந்தால் தத்தெடுக்கும் வாய்ப்புகள் இல்லை.

தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.

தம்பதியினரின் வருமான சான்றிதழ் தேவை. அசையா சொத்து நிச்சயம் இருக்க வேண்டும்.

திருமணமாகி விவாகரத்தாகியோ, கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தாலோ, தம்பதியினரில் யாராவது ஒருவர் மரணமடைந்து இருக்கும் பட்சத்திலோ, தனிமையில் இருக்கும் தங்கள் வாழ்க்கைக்குத் துணையாக ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் அவரது வயது 30-45 -க்குள் இருக்க வேண்டும்.

குழந்தையை தத்தெடுக்கும் தம்பதியினருக்கு மூவர் சிபாரிசு செய்ய வேண்டும்.

குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் தாய், தந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், அதன் பிறகு குழந்தையை பொறுப்பெடுத்து வளர்க்க நாங்கள் தயார் என வேறு ஒரு தம்பதி வாக்குறுதி தர வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் தம்பதியினருக்கும் சொத்துகள் இருக்க வேண்டும்.

இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் குழந்தை தத்தெடுக்க தம்பதியினருக்கு வாய்ப்பு இல்லாமல் போகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com