கடன் வாங்கவில்லை என்றாலும் நீங்கள் கடனாளிதான்..! மெசேஜ் மூலம் அரங்கேறும் மெகா மோசடி

கடன் வாங்கவில்லை என்றாலும் நீங்கள் கடனாளிதான்..! மெசேஜ் மூலம் அரங்கேறும் மெகா மோசடி
கடன் வாங்கவில்லை என்றாலும் நீங்கள் கடனாளிதான்..! மெசேஜ் மூலம் அரங்கேறும் மெகா மோசடி
Published on

செல்போன் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அதனால் ஏகப்பட்ட வசதிகள் நமக்கு கிடைத்தாலும் அதற்கு ஏற்ப பிரச்னைகளும் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. லோன் ஆப்கள் மூலம் எளிதாக கடன் கிடைக்கும் இந்தக் காலத்தில், நீங்கள் கடனே வாங்கவில்லை என்றாலும் செயலிகளை பதிவிறக்குவதன் மூலம் நீங்கள் கடன்பெற்றவர்போல கலங்கி நிற்கும் சூழலை உருவாக்குகிறது சில திருட்டு கும்பல்.

கடந்தாண்டு தொடக்கத்தில் லோன் ஆப்கள் மூலம் ஏராளமான முறைகேடுகள் நடந்தது. ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மேற்கொண்ட சில நடவடிக்கையின் காரணமாக கடன் பெற்றவர்கள் தற்கொலையும் செய்துக்கொண்டனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் கூட பேசுபொருளானாது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் "அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகிறது. அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது. அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம்" எனத் தெரிவித்தது.

இதன் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சில கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள். இந்த செயலிகள் மூலம் கடன் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் ஜெயந்த் குமார் தாஷ் தலைமையில் குழு ஒன்றை ஜனவரி 13, 2021 இல் அமைத்தது. அந்தக் குழு இப்போது தன்னுடைய ஆய்வை சமர்ப்பித்துள்ளது. அதில் "நவீன கால தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆப் மூலம் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அவற்றை தவறாக பயன்படுத்துகின்றன. வாடிக்கையாளர்களின் தனிமனித விவரங்கள் திருடப்படுகின்றன" எனக் கூறியுள்ளது.

மேலும் "அதிக வட்டி, தனி மனிதனை துன்புறுத்துவது, அவதூறாக பேசுவதிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் இவை வெளிநாட்டில் இருந்து இயங்கி அதிகளவிலான லாபத்தை சம்பாதிக்கிறார்கள். நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் படி 1100 லோன் செயலிகளில் 600 சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. பல முறைகேடுகள் தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. மிக முக்கியமாக தனிமனித விவரங்கள் திருடப்படுவதால் இதுபோன்ற செயலிகள் மூலம் கடன் வழங்கும் முறைக்கு மத்திய அரசு வழி வகை செய்ய வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது".

புதிய வழியில் நூதன மோசடி !

இப்போது பலருக்கும் வாட்ஸ்ப்பில் திடீரென மெஸேஜ் வருகிறது. அதில் "நீங்கள் எங்கள் செயலியை பயன்படுத்தி கடன் வாங்கியுள்ளீர்கள். கடனை திரும்பக் கட்ட இன்றே கடைசி தேதி. மெஸேஜில் இருக்கும் லிங்கை தகவிறக்கம் செய்து பணத்தை கட்டுங்கள். இப்போது நீங்கள் கட்டினால் மீண்டும் ஒருமுறை கடன் தொகை உயர்த்தப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் மெசேஜ் வந்த நபர் இதுவரை அப்படியொரு கடனை வாங்கியிருக்கமாட்டார். ஒருவேளை அந்த நபர் செயலியை பதிவிறக்கம் செய்தால், கடன் தொகை பெறாமலேயே கடன்பெற்றவர்போல காட்டிவிடும். மேலும் செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே செல்போனில் இருக்கும் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் எடுக்கப்படும்.

நீங்கள் கடனே வாங்கவில்லை என்றாலும் உங்கள் விவரங்கள் திருடப்பட்டு அதன் மூலம் உங்களை பணம் கட்டுப்படி நிர்பந்திப்பார்கள். மேலும் உங்கள் செல்போனில் இருக்கும் நெருக்கமானவர்கள் எண்களுக்கு "நீங்கள் கடன் வாங்கி கட்ட தவறியவர்" என்று மெசேஜ் அனுப்புவார்கள். இப்போது "Fast Credit", "Quick cash", "Small Loan" என்ற பெயர்களில் போலியான கடன் செயலிகளில் பெயர்களில் மெஸேஜ்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படுகிறது. மேலும் மிரட்டல் மெஸேஜ்களும் வர தவறுவதில்லை. மிரட்டல் மெஸேஜ்களில் பொதுவாக "நீங்கள் பணம் கட்ட தவறினால் உங்கள் மீது குர்கான் காவல்நிலையத்தில் வழக்கு போடப்படும், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்" என்றும் வரும்.

இதுபோன்ற மெஸேஜ்களை நாம் எப்படி கையாள்வது?

சைபர் குற்றங்கள் தொடர்ந்து பல வழக்குகளை சந்தித்த அனுபவம் கொண்ட வழக்கறிஞர் எஸ்.எஸ்.ரமேஷ் கூறும்போது "இதுபோன்ற போலியான மெஸேஜ்கள் வந்தால், முதலில் பதற்றமடையாமல் பொறுமையாக இருக்க வேண்டும். முதலில் நீங்கள் கடன் வாங்கியிருக்கிறீர்களா என்று யோசனை செய்யுங்கள். அப்படி இல்லையென்றால் இந்த மெஸேஜ்கள் புறம்தள்ளிவிடுங்கள். மிக முக்கியமாக மெஸேஜில் இருக்கும் "ப்ளே ஸ்டோர்" லிங்கை தரவிறக்கம் செய்யாதீர்கள். இது வடமாநிலங்களில் இருந்து இயங்கும் சில மோசடி கும்பல்களின் வேலை. உங்களை தொடர்ந்து இதுபோன்ற போலியானவர்கள் மிரட்டுகிறார்கள் என்றால் இதுபோன்ற தகவல் திருட்டுகள், சைபர் கிரைமில் வரும். பின்பு, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 -இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். மேலும், இதுபோன்ற நிறுவனங்கள் உங்கள் செல்போனில் உள்ள புகைப்படங்களைக் கூட எடுக்கலாம். ஜாக்கிரதையா இருக்க வேண்டும்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com