பாலிவுட் நிகராக 'கோல்டன் விசா' - கேரள ஸ்டார்களுக்கு யூஏஇ சிவப்புக் கம்பளம் விரிப்பது ஏன்?

பாலிவுட் நிகராக 'கோல்டன் விசா' - கேரள ஸ்டார்களுக்கு யூஏஇ சிவப்புக் கம்பளம் விரிப்பது ஏன்?
பாலிவுட் நிகராக 'கோல்டன் விசா' - கேரள ஸ்டார்களுக்கு யூஏஇ சிவப்புக் கம்பளம் விரிப்பது ஏன்?
Published on

ஐக்கிய அரபு அமீரகம் தங்களின் கௌரவத்துக்குரிய கோல்டன் விசாவை பாலிவுட்டுக்கு நிகராக மலையாள முக்கிய நட்சத்திரங்களுக்குக் கொடுத்து இருக்கிறது. இதன் பின்னணி குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

ஐக்கிய அரசு எமிரேட்ஸ் தன் நாட்டில் சிறந்த முதலீட்டாளர்கள் மற்றும் பிசினஸ்மேன்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய கௌரவ விசாக்களை வழங்குகிறது. அமீரகத்தில் வசிக்கும் 6,800 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இத்தகையை கௌரவத்தைப் பெற்றுள்ளனர். இந்த விசாவை பெற்றவர்கள் 10 ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் விசாவை புதுப்பித்தால் போதுமானது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கௌரவமாக நடத்தப்படுவார்கள்.

தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை கௌரவிக்கவும் தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கவும், தொழிலறிவு படைத்த மக்களை ஊக்கப்படுத்தவும் இத்தகைய நடைமுறையை அமீரக அரசு மேற்கொண்டுள்ளது. 2019 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த நடைமுறை தொழித்துறையை தாண்டி பொழுதுபோக்கு உட்பட சில துறைகளிலும் உள்ள சிறந்தவர்களைக் கௌரவித்து வருகிறது.

சமீபகாலமாக இந்த 'கோல்டன் விசா' கௌரவத்தை பாலிவுட் பிரபலங்களுக்கும், சில முக்கியமான நபர்களுக்கும் வழங்கி வருகிறது. சஞ்சய் தத், சல்மான் கான் என பல பாலிவுட் பிரபலங்கள் கோல்டன் விசா பெற்றனர். பாலிவுட்டுக்கு நிகராக மலையாள சினிமாவை சேர்ந்த ஆறு நடிகர்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், நடிகையும் ஆர்.ஜே-வுமான நைலா உஷா ஆகியோர் இந்த 'கோல்டன் விசா' கௌரவத்தை பெற்றுள்ளனர்.

கேரள நடிகர்களை ஐக்கிய அரபு அமீரகம் இந்த அளவுக்கு கௌரவிப்பதற்கு பல பின்னணிகள் உள்ளன. உண்மையில், கேரளாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இருக்கும் ஒரு நெருங்கிய பந்தம் இதற்கு முதன்மையான காரணம். இந்த நெருங்கிய பந்தம் பல தசாப்தங்களாக தொடர்கிறது. அரேபிய பெருங்கடலை ஒட்டி வசிக்கும் கேரள மக்கள் அதிகம் பணிபுரிவதில் முதலிடம் அமீரகத்துக்கும். இதற்கு ஒரு சின்ன தரவு. கடந்த 2014-ல் அப்போதைய கேரள அரசு வெளியிட்ட அதிகாரபூர்வக அறிக்கையில், வெளிநாடுகளில் பணிபுரியும் மலையாளிகளின் எண்ணிக்கை சுமார் 23.63 லட்சம் ஆகும். இதில் அமீரகத்தில் தான் அதிகம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

சுருக்கமாக சொன்னால் ஐக்கிய அரபு அமீரகம் மலையாளிகளின் இன்னொரு வீடாகும். மலையாளிகள் பலர் அங்கு தொழிலதிபர்களாகவும் கோலோச்சி வருகிறார்கள். கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்களைக் கணக்கில் கொண்டால், அதில் பாதிக்கும் அதிகமானோர் அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். இந்த பந்தம் மலையாள சினிமாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.

மலையாள சினிமா கேரளாவைத் தாண்டி அதிக திரையிடல்களை கொண்டுள்ள ஓர் இடம் அமீரகமே. அங்குள்ள மலையாளிகளுக்காக அதிகமான திரையரங்குகளில் மலையாள திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். மலையாள சினிமாவில் ஒரு பழக்கம் உண்டு. பொதுவாக படம் ரிலீஸின் முன்னால் நடத்தப்படும் புரொமோஷன் நிகழ்வுகளை கேரளாவில் மட்டுமில்லாமல் துபாயிலும் நடத்துவார்கள். அதேபோல் சினிமா நிகழ்ச்சி எதுவானாலும் அமீரகத்திலேயே நடத்துவது அவர்கள் வழக்கம்.

இந்த சினிமா பந்தம் மலையாள சினிமா நட்சத்திரங்களை அமீரகத்தில் பரிச்சமாக்கியது. இந்தத் தாக்கம் பல மலையாள படங்களிலும் பிரதிபலிக்கும். மம்மூட்டி, ஸ்ரீனிவாசன் நடிப்பில் வெளியான 'பத்தேமாரி' திரைப்படம், மலையாளிகளின் அரபு வாழ்வியலை சொல்லிய படம். இதுமாதிரி எண்ணற்ற படங்கள் அமீரகத்தை பின்னணியாக கொண்டு வந்துள்ளன.

இதைத் தாண்டி மலையாள சினிமா நட்சத்திரங்கள் பலரும் துபாயில் தங்கள் முதலீடுகளைத் செய்து வருகின்றனர். நடிகர் திலீப் தனது நண்பர் இயக்குநர் நாதிர்ஷா உடன் இணைந்து 'தே புட்டு' என்ற ரெஸ்டாரெண்டை கடந்த பல நடத்தி வருகிறார். இதன் கிளை துபாயிலும் இருக்கிறது. இதேபோல் நடிகர் பிருத்விராஜ் தனது சகோதரர் இந்திரஜித் உடன் இணைந்து 'ஸ்பைஸ் போட்' என்ற உணவகத்தை அமீரகத்தில் நடத்தி வருகிறார். கத்தார் தலைநகர் தோகாவிலும், துபாயிலும் இந்த உணவக கிளைகள் உள்ளன. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் துபாயில் சொந்தமாக வீடு வைத்துள்ளார். துல்கர் சல்மான் இரண்டு ஆண்டுகள் துபாயில் வசித்திருந்தவர். இந்த நெருக்கம் காரணமாக மலையாள நடிகர்களுக்கு கோல்டன் விசாவில் தாராளம் காட்டி ஐக்கிய அரபு அமீரகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று வருகிறது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com