வெளிநாட்டில் இருந்தபடி தமிழகத்தில் பாலியல்தொழில்: மனைவியிடம் இன்ஸ்டா வலையில் சிக்கிய கணவர்

வெளிநாட்டில் இருந்தபடி தமிழகத்தில் பாலியல்தொழில்: மனைவியிடம் இன்ஸ்டா வலையில் சிக்கிய கணவர்
வெளிநாட்டில் இருந்தபடி தமிழகத்தில் பாலியல்தொழில்: மனைவியிடம் இன்ஸ்டா வலையில் சிக்கிய கணவர்
Published on
வெளிநாட்டில் இருந்துகொண்டு தமிழகத்தில் பாலியல் தொழில் செய்து வந்த கணவரை, வேறு ஒரு பெண்ணைபோல நடித்து தமிழகம் வரவழைத்து காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார் அவர் மனைவி.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண் ஜோஷி. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் தற்போது பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னையில் பணியாற்றியபோது இவருக்கும் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரியான இளம்பெண்ணும் காதல் ஏற்பட்டுள்ளது. அக்காதலுக்கு முதலில் இருவீட்டாரும் மறுப்பு தெரிவித்தாலும்கூட, பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்றுக்கொண்டு, இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனர்.
திருமணம் முடித்த மூன்று மாதத்தில் அருண் ஜோஷி மீண்டும் பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் அதிர்ச்சியூட்டும் சில தகவல்களை, அவரது காதல் மனைவி கண்டறிந்திருக்கிறார். மேற்கொண்டு கம்ப்யூட்டரை ஆராய்ந்தபோது அருண் ஜோஷி பல பெண்களிடம் ஆபாசமாக உரையாடி அந்த பெண்களின் புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்களை தனது கம்ப்யூட்டரில் மறைத்து வைத்திருந்தது அவருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர் வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழகத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவருவதும் மனைவிக்கு தெரியவந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி பஹ்ரைனில் பணியாற்றி வரும் தனது கணவர் அருண் ஜோஷிக்கு நட்பு கோரிக்கை அனுப்பி உள்ளார். அருண் ஜோஷியும், வேறு ஒரு பெண் என நினைத்து தனது காதல் மனைவியின் நட்பு கோரிக்கையை ஏற்று உள்ளார். இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்ட ஓரிரு தினங்களிலேயே அருண் ஜோஷி ஆபாசமாக பேசி தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
மேலும் தன் மனைவியிடமே ‘உன்னை போன்ற பெண்களுக்கு தமிழக தொழிலதிபர்களிடம் நிறைய கிராக்கி உள்ளது’ எனக்கூறி, ‘நான் சொல்வதற்கு சம்மதித்தால் சில மாதங்களில் நீ பணக்காரியாக மாறிவிடலாம்’ என்று மெசேஜ் செய்திருக்கிறார். உடன் சில பெண்களின் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியின் உச்சிக்கே சென்ற காதல் மனைவி, தன்னை காதலித்து ஏமாற்றிய காதல் கணவரான அருண் ஜோஷி குறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்களோ, “இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால் உனது வாழ்க்கை நாசமாகி விடும்” எனக் கூறி மிரட்டி உள்ளனர். இதுபோன்ற அடுத்தடுத்த சிக்கலுக்கு உள்ளான அவர், தஞ்சையில் இருந்து சென்னை வந்துள்ளார். 
சென்னை வந்த அவர், தனது கணவரை தானே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என நினைத்த அப்பெண் ஒரு நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளார். அதன்படி காதல் கணவரான அருண்ஜோஷிக்கு தான் அடையாறு பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபர் மகள் எனவும் தங்களை நான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும் எனவும் சொல்லி உள்ளார்.
இந்த நிலையில் பஹ்ரைனில் இருக்கும் அவரது காதல் கணவரான அருண் ஜோஷிக்கு விமான டிக்கெட் புக் செய்து அவரை சென்னை வரவழைத்து திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வரவழைத்துள்ளார். தனக்கு ஒரு புது காதலி கிடைத்த சந்தோஷத்தில் அருண் ஜோஷி திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வந்தபோது அங்கு ஏற்கனவே தயாராக இருந்த அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
அப்போதுதான் தனது மனைவியை இப்படி ஒரு நாடகம் நடத்தி தன்னை சென்னை வரவழைத்து இருப்பதும் மேலும் தனது ரகசியங்களை காவல்துறையினரிடம் கூறி கைது செய்ய வைத்து இருப்பதும் தெரியவந்தது. மேலும், காதல் கணவர் மீது கடும் கோபத்தில் இருந்த அந்த இளம்பெண் சொகுசு விடுதிலேயே வைத்து காதல் அருண் ஜோஷியை கோபம் தீரும்வரை அடித்து உதைத்து இருக்கிறார். 
அருண் ஜோஷியை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு மொபைல்களில் பஹ்ரைனில் இருந்து கொண்டு தமிழகத்தில் உள்ள பல பெண்களிடம் பேசிய ஆபாச உரையாடல் மற்றும் ஆபாச புகைப்படங்கள் வீடியோக்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் அருண் ஜோஷியை காவல்துறையினர் கைது செய்தனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com