ரூ.9,000 கோடியை சுருட்டிய 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது காவல்துறை!

ரூ.9,000 கோடியை சுருட்டிய 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது காவல்துறை!
ரூ.9,000 கோடியை சுருட்டிய 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது காவல்துறை!
Published on

பொதுமக்களிடம் 9 ஆயிரம் கோடி ரூபாயை திருடிச்சென்ற 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது காவல்துறை.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் துவங்கப்பட்டு, அந்நிறுவனங்கள் பங்குச்சந்தை, ஆன்லைன் வர்த்தகம், நிலங்களில் முதலீடு செய்து மறு விற்பனை செய்தல் மற்றும் தங்க நகைகள் வாங்கி விற்பனை செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றன. மேலும் அந்நிறுவனங்கள், ‘எங்களுடன் இணைந்து முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம்’ என்று கூறி பொதுமக்களிடம் பண மோசடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் முக்கியமானவையாக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம், எல்.என்.எஸ் இண்டெர்நேஷ்ணல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனம், ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ஆகிய நிதி நிறுவனங்கள் கருதப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்தில் சுமார் 10% முதல் 25% வரை வட்டியாக வழங்குவதாக அறிவித்து, பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பெறுவதற்காக முகவர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆடம்பர நட்சத்திர விடுதிகளில் கூட்டங்கள் நடத்தி ஆசை வார்த்தைகளால் மக்களை ஈர்த்து கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்று வட்டியும், அசலும் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளன. இந்த மோசடி நிறுவனங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் தொடர்பான மோசடி புகார்களின் அடிப்படையில் கடந்த மே மாதம் 20ஆம் தேதி சென்னை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 37 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 1 லட்சத்து 09 ஆயிரத்து 255 பொதுமக்கள் அந்நிறுவனத்தில் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், இவ்வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு 5 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்.என்.எஸ் இண்டெர்நேஷ்ணல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிதி நிறுவனத்தின் மீதான மோசடி புகார்களின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. எல்.என்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் இதுவரை திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் இந்நிறுவனத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், இவ்வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகளாகிய மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவால் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஹிஜாவு நிறுவனத்திற்குச் சொந்தமான 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஹிஜாவு நிறுவன மோசடி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 4,500 பொதுமக்கள் இந்நிறுவனத்தில் சுமார் 600 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடு செய்த தொகையின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 2 முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த 3 பெரிய நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக மேற்கொண்டு புகார் அளிக்க தனித்தனியாக மின்னஞ்சல் முகவரிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மோசடி வழக்குகளிலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களும் தற்போது தமிழக காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த ராஜசேகர், மைக்கேல் ராஜ், உஷா, ஆகியோரையும் அதேபோன்று ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிடெட் வழக்கில் தொடர்புடைய அலெக்சாண்டர் மகாலட்சுமி ஆகியோரையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல் என் எஸ் மற்றும் ஐஎஃப்எஸ் நிதி நிறுவன வழக்கில் தொடர்புடைய மோகன்பாபு, லட்சுமி நாராயணன், சுரேஷ் ஆதிகேசவலு, இனியா, சுஜாதா கந்தா, கௌரிசங்கர், சந்திரசேகரம், கலைச்செல்வி, ஆகியோரையும் தேடப்படும் குற்றவாளியாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்

தலைமறைவு குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவின் காவல் கண்காணிப்பாளரை அணுகி தெரிவிக்குமாறு தமிழக காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகவல் உறுதியானதாக இருப்பின் சம்மந்தப்பட்டவர்களுக்கு தக்க சன்மானமும், ரொக்கப் பரிசும் வழங்கப்படும் எனவும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களை நம்பி தங்கள் பணத்தை பொதுமக்கள் இழக்காமல், ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்து பயனடையுமாறும் தமிழக காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com