சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பஸ்தார் பகுதியில் கெர்வாஹி மேல்நிலைப்பள்ளியில் கிட்டத்தட்ட 25 மாணவர்கள் அங்கு இருக்கும் ஆசிரியர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வீடியோ ஒன்று வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கெர்வாஹி மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் மதிய உணவு இடைவேளை நேரத்தில் அங்கிருக்கும் கழிவறைக்கு வெளியே சில மாணவர்கள் ஒய்வெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ஆரிசியர்கள் மாணவர்களிடம் எதற்காக இங்கு வந்து அமர்ந்து இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
ஆசிரியரிடம் பதிலளிக்க பயந்த மாணவர்களுக்கு தண்டனை தர நினைத்தவர்கள், மதிய உணவு சமையலறையில் இருந்து கொண்டுவரப்பட்ட சூடான எண்ணையை மாணவர்கள் ஒருவருக்குள் ஒருவர் கைகளில் ஊற்றிக்கொள்ளுமாறு கட்டளையிடவே, ஆசிரியர்களின் கட்டளையை மீற முடியாத மாணவர்கள், சூடான எண்ணையை தங்களுக்குள் மாறி மாறி கைகளில் ஊற்றிக்கொண்டுள்ளனர்.
இதில் சில மாணவர்களின் கைகளில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. இதை கவனித்த மாணவர்களின் பெற்றோர்கள், வீடியோ ஆதாரத்துடன் பள்ளிக்கு சென்று புகாரளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறையின் அலுவலர் தாஹிர்கான் கூறுகையில், “இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், இதற்கு காரணமான மூன்று ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள். இதை தவிர, மாவட்ட கல்வித்துறை விசாரணைக்குழுவை அமைத்து பள்ளியில் நடந்த சம்பவம் குறித்த விவரத்தை மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்பிப்பார்கள். இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.