செய்தியாளர்: எஸ்.மோகன்ராஜ்
சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் 16 வயது மகன், தனது உறவினரின் அதிவேக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, அம்மாப்பேட்டை காமராஜர் நகர் காலனி பகுதியில் அச்சிறுவன் அங்கப்பன் என்பவர் மீது மோதிய விபத்தில் இருவரும் காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் சிறுவனை, வாகனத்தை இயக்க அனுமதித்த தந்தை குமார் மற்றும் வாகனத்தை கொடுத்த சிறுவனின் உறவினர் குணசேகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வாகன பதிவை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.