கோபத்தில் உளறிய ஒற்றை வார்த்தை.. 15 வருட மர்மத்திற்கு கிடைத்த விடை! கேரளாவை அலறவிட்ட கொலை வழக்கு!

கேரளா: 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை ஒன்று தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பாகி வருகிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இறந்த பெண், பிரமோத்
இறந்த பெண், பிரமோத்மனோரமா
Published on

கேரளா: 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை ஒன்று தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பாகி வருகிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

கேரளா ஆலப்புழா இரமாத்தூரைச் சேர்ந்தவர் அனில். இவர் கலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார். ஆனால் இவர்களது காதல் திருமணத்திற்கு அனில் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்நிலையில், இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கவே... அனிலின் வீட்டினர் கலாவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அனிலுக்கு தென் ஆப்ரிக்காவில் வேலை கிடைக்கவே... அவர் தனது மனைவியை தன்வீட்டில் விட்டு விட்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார். ஆனால் அதன் பிறகு கலாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கலா அப்பகுதியில் இருக்கும் இளைஞர் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இச்செய்தி அனிலின் குடும்பத்திற்கு தெரியவரவே... அனிலின் தாயார் கலாவை கண்டித்ததுடன், அனிலிடமும் விஷயத்தை கூறியுள்ளனர்.

மனோரமா

இந்நிலையில் 2009 ஆண்டு கலா தனது ஒன்னரை வயது குழந்தையை விட்டுவிட்டு காணாமல் போய் இருக்கிறார். எங்கே தேடியும் கலா கிடைக்காததால், கலா யாருடனேயோ சென்றுவிட்டதாக நினைத்து அவரை தேடுவதை குடும்பத்தினர் நிறுத்தி விட்டனர். நாட்கள் கடந்தது, அனிலும் வேறு திருமணம் செய்துக்கொண்டு நிம்மதியாக வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தற்பொழுது இவர் உக்ரைனில் பணிபுரிந்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க....

அனிலின் நெருங்கிய நண்பர்கள் ஜினு, சுரேஷ், சோமன் மற்றும் பிரமோத் இவர்கள் அனைவரும் ஆலப்புழாவில் வசித்து வரும் நிலையில், பிரமோதிற்கு திருமணமாகி ஒரு மகன் உண்டு. ஆனால் பிரமோத்திற்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில், மகனையும் மனைவியையும் கொலை செய்யும் வரைக்கு சென்றுள்ளார். இதனால் உயிருக்கு பயந்த பிரமோத்தின் மனைவி தனது மகனுடன் தனது தாய்வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் பிரமோத் அவர்களை விடுவதாக இல்லை... தனது மனைவியின் வீட்டிற்கு வந்தவர், அங்கு மீண்டும் தனது மனைவியுடன் பிரச்சனை செய்துள்ளார். இருவருக்கிடையே நடந்த வாக்குவாதத்தில், பிரமோத் தனது மனைவியிடம், “உன்னை கலாவை கொன்றது போல் கொன்றுவிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

மனோரமா

கலாதான் வேறொருவருடன் ஊரைவிட்டு ஓடிபோய் இருக்கிறாரே... இது என்ன புதுக்கதையாக இருக்கு? என்று சந்தேகம் கொண்டுள்ளார் பிரமோத்தின் மனைவி.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இரமாத்தூர் காவல் நிலையத்திற்கு ஒரு மொட்டைகடிதம் வந்துள்ளது. அதில், கலா யாருடனும் ஓடிப்போகவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கொலைக்கு ஜினு, சுரேஷ், சோமன், பிரமோத் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர என்று எழுதப்பட்டிருந்ததைக்கண்ட போலிசார் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்தனர்.

முதலாவதாக இந்த கொலையில் சம்பந்த பட்டவர்களை தேடும் பொழுது, சுரேஷும், பிரமோத்தும் போலிசாரிடம் பிடிபட்டனர். ஆனால் ஜினு மற்றும் சோமன் ஆகியோர் தலைமறைவாகினர். பிரமோத்தை போலிசார் விசாரிக்கும் பொழுது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, 2009ல் கலா யாருடனோ தவறான பழக்கத்தில் இருக்கிறார் என்ற செய்தி அனிலுக்கு தெரியவந்ததும், அவர் இந்தியா வந்துள்ளார்.

பின் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தனது காரில் பெரும்புழாசென்றுள்ளார். காரில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கலாவிற்கு குடிக்க கூல்டிரிங்ஸ் வாங்கி தந்த அனில் அதில் மயக்கமருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதைக்குடித்த கலா அடுத்த நிமிடம் மயக்கமுற்றுள்ளார். அப்பொழுது அனில் தனது மனைவியான கலாவை கொன்றுள்ளார். அதன்பிறகு உடலை என்ன செய்வது என்று தெரியாதநிலையில், அனில் நண்பர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதில் அனிலுக்கு சுரேஷ் உதவமறுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற நண்பர்களின் உதவியில், இறந்து கிடந்த கலாவை, மறைத்து எடுத்து வந்து அனில் வீட்டில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் போட்டதாக பிரமோத் வாக்குமூலம் கொடுக்கவே... மொத்த கேரளாவே அதிர்ந்துள்ளது.

மனோரமா

அதன்பிறகு போலிசார் 15 வருடங்களுக்கு முன் காணாமல் போன கலாவை பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு அடுத்தடுத்த ஷாக் தயாராக இருந்தது. பிரமோத் வாக்குமூலத்தின்படி கலாவின் உடலை கழிவு நீர் தொட்டியில் போட்டதாகக்கூறப்பட்ட இடத்திற்கு வந்த போலிசார் அங்கு சோதனையை மேற்கொண்டனர். சோதனையில் கழிவுநீர் தொட்டியிலிருந்து லாக்கெட் ஹேர்கிளிப் எலாஸ்டிக் உடை ஆகியவை கிடைத்தது, ஆனால் இறந்ததாக சொல்லப்பட்ட கலாவின் ஒரு சிறு எலும்பு துண்டு கூட அதிலிருந்து கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் அனிலின் நண்பர்களிடம் போலிசார் விசாரணையைத் தொடங்கினர். இதில் பிரகாஷ் தான் நிரபராதி என்றும், இந்த கேஸுக்கு சாட்சியமாக இருப்பதாக கூறியதால், அவரின் வாக்குமூலம் போலிசாருக்கு முக்கிய சாட்சியாக இருக்கிறது.

ஆனாலும் போலிசாருக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. அதாவது இறந்த கலாவின் உடலானது கிடைக்ககூடாது என்பதற்காக ஏதேனும் கெமிக்கல் கொண்டு அந்த உடலை அழித்து இருக்கலாம் என்று முதலில் சந்தேகித்தனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக குறைவானதாக இருந்ததால், ‘த்ரிஷ்யம்’(தமிழில் பாபநாசம்) படம் போன்று கலாவின் உடலை அனில் எடுத்து வேறு இடத்திற்கு மாற்றி இருக்கலாம். என்று சந்தேகம் கொண்டுள்ளனர். தற்பொழுது அவ்விடத்தை போலிசார் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருக்கின்றனர்.

மனோரமா

இந்நிலையில் உக்ரைனில் இருக்கும் அனிலை இந்தியா வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் அனில் வந்து நடந்தது என்ன என்று சொன்னால்தான் இந்த வழக்கானது முடிவுக்கு வரும் என்ற நிலையில் உள்ளது. இதனிடையில் கழிவுநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட ஹேர்கிளிப் , எலாஸ்டிக் , லாக்கெட் ஆகியவை தடவியலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அனிலின் உறவினர்கள் மற்றும் இரமாத்தூரைச் சேர்ந்த ஆர்,சோமராஜன் கண்ணம்பள்ளி கே.சி.பிரமோத் 40 ஜினு கோபி 48 ஆகியோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போலிசார் அனிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com