அரசு வேலைக்கான போலி ஆணவங்கள் - ரூ.3 கோடி மோசடி செய்த நபரின் 9 இடங்களில் சோதனை

அரசு வேலைக்கான போலி ஆணவங்கள் - ரூ.3 கோடி மோசடி செய்த நபரின் 9 இடங்களில் சோதனை

அரசு வேலைக்கான போலி ஆணவங்கள் - ரூ.3 கோடி மோசடி செய்த நபரின் 9 இடங்களில் சோதனை
Published on

அரசின் போலி பணி நியமன ஆணைகள் வழங்கி ரூ. 3 கோடி மோசடி வழக்கில் கைதானவருக்கு தொடர்புடைய 9 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினர்.

சுமார் 60க்கும் மேற்பட்ட வேலை தேடும் இளைஞர்களிடம் மொத்தம் ரூபாய் 3 கோடிக்கும் மேல் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகள் அளித்து மோகன்ராஜ் என்பவர் மற்றும் அவருடைய முகவர்கள் ஏமாற்றியதுடன் போலியான நேர்முகத் தேர்வுகளை வேலை தேடும் இளைஞர்களுக்கு நடத்தி, அவர்களுடைய கையொப்பத்தை பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கியும் ஏமாற்றியுள்ளதாக தனசேகர் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணைக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதம் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டார். இது தொடர்பாக ஏற்கனவே மோகன்ராஜ் முகப்பேரில் நடத்தி வந்த வனாஸ்பையர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு குற்றத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக நேற்று திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர், செங்குன்றம், சென்னை தி.நகர், பாடி, பெரம்பூர் ஆகிய 5 இடங்களில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனைகள் செய்யப்பட்டு அவற்றில் ஒரு இடத்துக்கு சீல் வைக்கப்பட்டு மற்ற இடங்களில் சோதனையில் குற்றத்துடன் தொடர்புடைய 9 லேப்டாப்கள், 1 கணினி, 370 பயோடேட்டாக்கள், உண்மைச் சான்றிதழ்கள் 71, சான்றிதழ்களின் நகல்கள் 150, 3 CPU-க்கள், 400 படிவங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றுக் கொண்டு, அவர்களின் கல்விச் சான்றிதழையும் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோகன்ராஜ் ஏமாற்றியுள்ளார். தான் அமைப்பு ரீதியாக செல்வாக்கான நபர் என்பதைக் காட்டிக் கொண்டு பொது மக்களை ஏமாற்றியுள்ளார். இந்த வழக்கின் தொடர்புடைய மோகன்ராஜ் கடந்த ஏப்ரல் மாதம் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஏஜென்ட்களையோ, செல்வாக்கான நபர் என்று காட்டிக்கொண்டு ஏமாற்றும் நபர்களிடமோ பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவணங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வழங்கும் திட்டம் கிடையாது. வேலைக்காக முயற்சி செய்பவர்கள் அரசு வேலைக்காக யாரிடமும் வங்கியின் மூலமாகவோ, ரொக்கமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com