செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை சூளைமேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த சைக்கிள்கள் தொடர்ந்து திருடுபோவதாக சைக்கிளின் உரிமையாளர்கள் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வந்தனர். இந்தப் புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சூளைமேடு காந்தி தெருவை சேர்ந்த சதீஷ் என்பவர்தான் பல வீடுகளுக்குள் சென்று சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 12 விலையுயர்ந்த சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் விலையுயர்ந்த சைக்கிள்களை குறி வைத்து திருடியதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சதீஷிடம் சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.