சேலம்: சொத்து தகராறில் அண்ணனை மறைந்திருந்து சுட்டுக்கொன்றதாக தம்பி கைது

சேலம்: சொத்து தகராறில் அண்ணனை மறைந்திருந்து சுட்டுக்கொன்றதாக தம்பி கைது
சேலம்: சொத்து தகராறில் அண்ணனை மறைந்திருந்து சுட்டுக்கொன்றதாக தம்பி கைது
Published on

சேலம் ஆத்தூர் அருகே சொத்து தகராறில் அண்ணனை சுட்டுக் கொன்றதாக அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதியை சேர்ந்த பெரியதாயி என்பவருக்கு நான்கு மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் செல்வம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தற்போது வேடுகாத்தாம்பட்டியில் மனைவி ரேவதி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலித் தொழில் செய்து வரும் செல்வம் அவ்வப்போது புத்தூர் பகுதிக்கு வந்து தனது தாயாரைச் சந்தித்து செல்வது வழக்கம்.

அவ்வாறு இன்று காலை செல்வம் தாயாரைச் சந்தித்து விட்டு அவரது வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர் வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக அவரது தம்பி சந்தோஷ் செல்வத்தை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அண்ணன் தம்பி இடையே நிலவி வந்த சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். கூலி வேலை செய்துவரும் சந்தோஷ் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி எங்கிருந்து பெறப்பட்டது, கள்ளத்தனமாக பதுக்கி வைத்து எதற்கெல்லாம் பயன்படுத்தி வந்தார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com