ரஷ்ய இளைஞனால் உருவாக்கப்பட்ட விளையாட்டு... உயிர்பறிக்கும் ’ப்ளுவேல்’

ரஷ்ய இளைஞனால் உருவாக்கப்பட்ட விளையாட்டு... உயிர்பறிக்கும் ’ப்ளுவேல்’
ரஷ்ய இளைஞனால் உருவாக்கப்பட்ட விளையாட்டு... உயிர்பறிக்கும் ’ப்ளுவேல்’
Published on

2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய விளையாட்டு ப்ளூவேல் சேலஞ்ச். சமீபத்தில் இந்தியாவிலும் இந்த விளையாட்டு உடுருவியுள்ளது. 50 படி நிலைகள் வரை கொண்ட இந்த இணைய விளையாட்டு உயிர்பறிக்கும் ஆபத்தான விளையாட்டு என்று எச்சரிக்கிறார் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் செந்தில் குமார்.

ப்ளுவேல் ஆன்லைன் விளையாட்டு சைக்காலஜி படித்த 22 வயது இளைஞனால் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட உயிர்கொல்லி விளையாட்டு தான் இது. 50 படி நிலைகலைக் கொண்டது இந்த விளையாட்டு. நடுநிசியில் பேய் படம் பார்ப்பது, ஆளில்லாத இடத்தில் தன்னந்தனியே நடந்து செல்வது, திமிங்கலத்தின் உருவத்தை கையில் கீறி வரைவது என நீளும் இந்த படிநிலைகள் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதில் முடிகிறது. இந்த விளையாட்டு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் நூற்றுக் கணக்கில் இளம் உயிர்களை காவு வாங்கிய நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட எந்த ஒரு விசயமும் இந்தியாவிற்கு வருவது போல் தற்போது வந்திருப்பதுதான் இந்த ப்ளுவேல் ஆன்லைன் விளையாட்டும்.

ப்ளுவேல் ஆன்லைன் விளையாட்டில் பிள்ளைகள் ஈடுபடாமல் தடுக்க, கண்காணிக்குமாறு பெற்றோருக்கு சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யாவில் தொடங்கி பல்வேறு நாடுகளில் சிறுவர்களின் உயிரை பறித்த இந்த விளையாட்டு நம் நாட்டிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. 

இந்த நிலையில் தான் கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ நிறுவனங்கள்‌ இந்த விளையாட்டையும், அதன் தொடர்பு வலையையும் அகற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆயினும் இன்னும் இந்த விளையாட்டுக்கான தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்பறிக்கும் ப்ளுவேல் விளையாட்டை சைபர் கிரைம் மூலம் கண்காணிக்க முடியாது எனவும், பெற்றோர்கள் கவனமாக இருப்பதன் மூலமாகவே குழந்தைகளை பாதுகாக்க முடியும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இது குறித்த புகார்கள் எதுவும் வரவில்லை என்று கூறும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடாமல் குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள். 

ப்ளுவேல் விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் ந‌டவடிக்கை எடுத்தாலும் பெற்றோர் தனது பிள்ளைகளுடன் நெருக்கமாகவும், கருத்து பரிமாற்றம் உடையவர்களாகவும் இருந்தால் இதுபோன்ற எந்த புறக்காரணியும் குடும்பத்தில் ஒரு உயிரை பறித்து சென்றுவிட முடியாது ‌என்பதே உளவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com