அசுரன் | ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் மட்டும்தான் பேசியதா? காலம் கடந்து பேசப்படும் ’காவியம்’ ஏன்?

அசுரன் படத்தில் உணர்வுபூர்வமாக பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சமூக அரசியல் ரீதியாக அதிக அளவில் பேசப்பட்டதால் இதுபோன்ற விஷயங்கள் அந்த அளவில் கவனிக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.
அசுரன்
அசுரன்pt web
Published on

அசுரன்

அசுரன்.. வெற்றிமாறன், தனுஷ், ஜிவி பிரகாஷ் என மூன்று அசுரர்கள் இணைந்து, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலுக்கு திரைமொழி கொடுத்த படம். வெற்றிமாறனின் திரைக்கதையா, தனுஷின் நடிப்பா, ஜிவிபியின் இசையா எது சிறந்தது என்ற கேள்விக்கு, விவாதத்தைத் தாண்டி முடிவு என்ற ஒன்றை எட்டமுடியாது. படத்தின் கதைக்களம், அது பேசிய அரசியலில் உணர்வுப் பூர்வமான, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள் இன்னும் அதிகம் கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவைகளோ என்றுகூடத் தோன்றுகிறது.. உதாரணமாக, பாடல்களையும், பச்சையம்மாள் சிவசாமி இடையே இருந்த காதலையும் சொல்லலாம்..

வெக்கை - அசுரன்
வெக்கை - அசுரன்

தன் மனைவி பச்சையம்மாள் வரச் சொல்லி இருந்த அந்த இடத்தில், அவள் இல்லாததை கண்டதும் ஒரு நிமிடம் சிவசாமி திகைத்து நின்றுவிடுவான். தன் மனைவிக்கு என்ன ஆனதோ? தேடுபவர்களின் கைகளில் சிக்கிக் கொண்டாளோ? என ஒன்றும் புரியாமல் முழு அச்சத்துடன் கால் ஊன்ற முடியாத நிலைக்கு செல்வான் சிவசாமி. கால்கள் தட்டுத் தடுமாறும் நிலையில், அருகில் இருக்கும் திட்டின் மீது அமர்வான். முகம் வாடி, வதங்கிய நிலையில் சிவசாமி இருக்க பின்புலத்தில் “கண்ணழகு ரத்தினமே.. கை அசையும் பொற்சிலையே.. காணலையே கண்ணே உன்ன காணலையே கையும் காலும் உன்ன எண்ணி ஓடலையே..” என்ற வரிகளில் பாடல் ஒலிக்கும்.. தனுஷின் மயக்கும் இசைஞானியை போன்ற குரலும், ஜிவியின் இசையும் ஒரு நிமிடம் நம் கண்களை குளமாக்கிவிடும்.. அசுரன் படத்தின் இந்த காட்சி கணவன் மனைவி இடையிலான அன்பை வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான காட்சி.

அசுரன்
"அது என்ன யா யா! இது காஃபி ஷாப் இல்லை, நீதிமன்றம்"-தொடரும் தலைமைநீதிபதி சந்திரசூட்டின் கண்டிப்புகள்!

சிவசாமி - பச்சையம்மாள் பரிசுத்தமான அன்பு

தமிழ் சினிமா உலகில் வயது முதிர்ந்த கணவன் - மனைவி இடையிலான அன்பை மிகவும் ஆழமாக காட்சிப்படுத்திய படங்கள் மிகவும் சொற்பமானவை. சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் கெத்து பூமாலை (தினேஷ்) - அசோதை கதாபாத்திரங்களுக்கு இடையிலான ஆத்மார்த்த உறவை அழகாக படத்தின் இயக்குநர் காட்சிப்படுத்தி இருப்பார். பண்ணையாரும் பத்மினியும் போன்ற சில படங்களில் மட்டுமே இதுபோன்ற காட்சிகளை அரிதாக காண முடிகிறது. அப்படியான ஒரு காட்சிதான் அசுரன் படத்தில் வருவது. சிவசாமி (தனுஷ்) - பச்சையம்மாள் (மஞ்சுவாரியர்) இடையிலான காட்சிகள்.. இருவரும் இடையிலான பரிசுத்தமான அன்பு சில காட்சிகளில் மட்டுமே வெளிப்படும். கோயிலில் வைத்து மீண்டும் தன்னுடைய மனைவியை சிவசாமி சந்திக்கும் அந்த காட்சி அதற்கு மற்றொரு உதாரணம்.

இப்படி அசுரன் படத்தில் உணர்வுபூர்வமாக பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக அரசியல் அதிக அளவில் பேசப்பட்டதால் இதுபோன்ற விஷயங்கள் அந்த அளவில் கவனிக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது. இருப்பினும் காலத்திற்கும் கொண்டாடக் கூடிய அளவிற்கு அசுரன் படத்தில் பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையானது என்று சொன்னால் அது, ‘எள்ளு வயல் பூக்கலையே’ பாடலைச் சொல்லலாம்.

அசுரன்
உபியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியர் குடும்பம்.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவமா? யோகி அரசு விசாரணை!

வா அசுரா வா

பண்டைய தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என்ற இரண்டு வகைக்குள் பிரித்து கையாளப் படுகிறது. அதாவது, காதலும் வீரமும் என்று பிரிப்பார்கள். ஆனால், காதல் என்று சுருக்கிவிடாமல் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பலவிதமான உணர்வுகளை தாங்கி நிற்பதே அக இலக்கியங்கள். புறம் என்பது வீரத்தை மட்டுமல்ல அதனையும் தாண்டியது. பல்வேறு விதமான உணர்வுகளைத் தாங்கி நிற்பது. அப்படி அசுரன் படத்தின் மூன்று பாடல்கள் அகம் - புறம் பேசும் இலக்கிய தன்மையை கொண்டவை.

‘வா அசுரா வா’ என்ற பாடல் கிட்டதட்ட அநீதிக்கு எதிராக ஆயுதமேந்த வைக்கும் போர் வெறியூட்டும் பாடல். ‘ஏலம் போட்டு பிரிக்குது.. ஓரம் கட்டி அடிக்குது.. பேதப்பார்வை வேர்வைப் போல ஊறிபோன உலகிது’ என சமூகத்தின் நிலையை பறை சாற்றுவதோடு ‘வா எதிரில் வா.. எதிர்படும் நொடியில் தலைகள் சிதற’ என்று வாளேந்த சொல்வதோடு ‘நீதி எதுவென இன்று நீயும் கூறிடு.. ஆதி எதுவென கொஞ்சம் நீயும் ஓடிடி.. ’ என்று அழுத்தமாக தன் பாதையையும் கூறுகிறது. இந்தப் பாடலுக்கு ஜிவி பிரகாஷ் மிகவும் வித்தியாசமாக இசையை கையாண்டிருப்பார். கேட்பவர்கள் உடல் சிலிர்த்து வீரம் ஊற்றெடுக்கும் வகையில் இருக்கும் அந்த துடிப்பான இசை. அப்படியொரு பிரம்மாண்டமான நெஞ்சில் தைரிய உரமூட்டும் இசை. இந்தப்பாடல் இடம்பெறும் இடமெல்லாம் நாமே நீதியின் பக்கம் நின்று அநீதிக்கு எதிராக சண்டை போட வேண்டும் என தூண்டுவதுபோல் இருக்கும்.

அசுரன்
‘இளமைக்கு போலாம் வாங்க...’ - இஸ்ரேல் Time Machine எனக்கூறி ரூ.35 கோடி மோசடி.. தலைமறைவான உ.பி. ஜோடி!

”எள்ளுவய பூக்கலயே..” - இது புறநானூறு பாடலுக்கு இணையானது!

அசுரன் படத்தில் காவியத் தன்மை வாய்ந்த பாடல் என்றால் அது ‘எள்ளுவய பூக்கலையே’ பாடல் தான். புறநானூற்று பாடல்களில் மகனின் வீரத்தை தாய் போற்றி பாடுவது போல் பல பாடல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலின் ஒரே நேரத்தில் மகனை இறப்பை ஏற்க மறுக்கும் மனதின் வலியும், மகனின் வீரத்தை போற்றி பாடும் தன்மையும் ஒருசேர இருக்கும். கண்களை குளமாக்கும் வீரத்தை நம்மை தாங்கிச் செல்ல வைக்கும் பாடல் இது. இன்றளவும் பலரது இறப்புகளின் போதும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஆறுதலான பாடலாக இந்தப் உள்ளது. அதிலும் கூட ஊருக்காக, மக்களுக்காக நின்றவர்கள் இறந்தால் இந்தப்பாடல் மிகவும் பொருத்தமான ஒன்றாக அமைந்துவிடுகிறது. அந்த அளவிற்கு வாழ்க்கையோடு நெருக்கமான பாடலாக பலருக்கும் உள்ளது. தமிழ் சமூகத்தின் வாழ்வியலோடு நெருக்கமாக கலந்த ஒரு பாடல் இது.

இந்தப் பாடல் குறித்து அதனை எழுதிய பாடலாசிரியர் யுகபாரதி பல முறை பேசியிருக்கிறார். பாடல் தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டிகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அற்புதமாக இருக்கும். பல தகவல்களை அது உள்ளடக்கி இருக்கிறது. இந்தப் பாடல் குறித்து மிகவும் விரிவாக யுகபாரதியே எழுதி ஒரு பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், “முழுத்திரைப்படமும் முடிந்த தருவாயில்தான் 'எள்ளுவய பூக்கலையே’ பாடலுக்காக என்னை அழைத்திருந்தார். காட்சியையும் சூழலையும் விவரிக்கவில்லை. காட்டினார்.

அசுரன்
தலைமைச் செயலகத்தின் 3-வது மாடியில் இருந்த குதித்த துணை சபாநாயகர்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு!

மொத்த சிந்தனைகளும் மூளியாயின..

சம்பந்தப்பட்ட காட்சியைப் பார்த்ததும் முகமே வெளிறிவிட்டது. மொத்தச் சிந்தனைகளும் மூளியாயின. வலுவிழந்த மனநிலையில் உடைந்தழவும் தோன்றிற்று. விடுதலைக்கேங்கும் ஓர் ஆதிப்புத்திரன், சாதிய வன்மர்களால் அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டு விடுகிறான் என்பதே காட்சி. தென்மாவட்டக் களமெனினும், பிற்பகுதிகள் கீழத்தஞ்சையை நினைவூட்டின. குறிப்பாக, வெண்மணியை.

மகனே சகலமுமென்று நம்பிய தாய், அவன் இறப்பை ஏற்க மறுக்கிறாள். அசகாய சூரனாக தன் மகன் ஏழு லோகத்தையும் வென்று வருவான் என எண்ணியதில் மண் விழுகிறது. உண்மையை ஏற்க மறுத்து, உயிரோடிருக்கிறான் என வாதிடுகிறாள். ஆகவே, ஈமச் சடங்குகளைச் செய்யவும் கூடாதென்கிறாள். கணவனிடமும் சகோதரனிடமும் பதினாறாம் நாள் படையல் எதற்கென்று பாய்கிறாள். ஏற்பாடுகளை எட்டி உதைக்கிறாள். அங்கிருந்து பாடல் ஆரம்பமாகிறது.

அசுரன்
”இரத்தம் சிந்தும் லெபனான் மக்களுக்காக நிற்போம்; இஸ்ரேல் வெற்றிபெறாது” - ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி!

மரணத்திற்குப் பின்னுள்ள சமூக அரசியல்

பொதுவெளியில் தலித்துகளுக்கு நேரும் கொடுமைகளைப் பற்றிய கதையென்பதால் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளவேண்டிய கட்டாயமிருந்தது. தோன்றுவதை எழுதினால் தொந்தரவென்று தெரிந்ததால் வீடு வரும்வரை அச்சமே பீடித்தது. கையளிக்கப்பட்ட சமூகப் பொறுப்பை காபந்து செய்வதே என் கடமை. மரணம் கொடியது. அதைவிட, அம்மரணத்திற்குப் பின்னுள்ள சமூக அரசியல் சங்கடப்படுத்தியது.

அதே உணர்வெழுச்சியில் அமர்ந்ததும், `எள்ளுவய பூக்கலையே / ஏறெடுத்தும் பாக்கலையே’ எனும் வரிகள் வந்துவிழுந்தன. `இடம் இலை உழுந்து இட, உலகம் எங்கணும் / அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட்கொம்பு ஆயினன்’ என கம்பன் எழுதுவான்.

அசுரன்
ஆவடி: வீட்டை பூட்டி சாவியை ஒளித்த உரிமையாளர்; திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வீட்டுக்கு வரவேண்டியவன் காட்டிலே கிடக்கின்றான்

சிவதனுசை உடைக்க ராமன் வரும்போது ஊரெங்கும் அத்தனைக் கூட்டமாம். எள் விழக்கூட இடமில்லாத நெரிசல் என்பதையே உழுந்து இட’ என்கிறான். உழுந்தும் உளுந்தும் வேறில்லை. ‘ழு’கரமே ‘ளு’கரமாக ஆகியிருக்கிறது. நல்ல காரியத்திற்கு ராமன் வந்திருப்பதால் எள்ளுக்குப் பதில் உழுந்தை கம்பன் உவமித்திருக்கிறான். பெஞ்சமின் லெபோவின் 'கம்பன் களஞ்சியம்’ நூலில் எப்போதோ வாசித்த நயவுரை.

எள்ளுவய தற்செயலாகத் தோன்றினாலும் ‘எள்’ குறித்த இலக்கியப் பதிவுகளை நிரல்படுத்தி மேலதிக வார்த்தைகளை எழுதினேன். எள்ளும் தாவர வகைகளில் ஒன்றுதான். ஆயினும், சமூக மதிப்புணர்வில் அதற்குச் சில விலக்குகள் உள்ளன. இறந்தவர் நினைவாக மேற்கொள்ளப்படும் பிண்டம் கரைத்தல் சடங்கிலும், சிரார்த்த சடங்கிலும் பயன்படுத்தப்படுவதால் எள்ளையும் மரணத்தையும் இணைத்துப் பார்க்கிறோம் அதனால், எள் செடியை வீட்டில் வளர்ப்பதில்லை. வீட்டுக்கும் காட்டுக்குமுள்ள வித்தியாசத்தை உணர்த்த ‘எள்ளுவய’ பொருந்தியது. வீட்டுக்கு வரவேண்டியவன், காட்டிலே கிடக்கிறான்.

ஒரே மூச்சில் முழு பல்லவியையும் எழுதினேன். அடுத்தடுத்த வரிகளை என்னுள் பரவியிருந்த சோகமே கொடுத்தன. நேதாஜியும் பிரபாகரனும் இறக்கவே மாட்டார்கள் என்னும் நம்பிக்கையை தாயின் மொழியாக மாற்றிச் சொல்ல விரும்பினேன். போராளிகள் சாவதில்லை. வெவ்வேறு ரூபங்களில் முளைப்பார்கள். சித்தாந்தச் சிராய்ப்புகளால் போராட்டங்கள் தோற்பதுண்டு. ஆனால், முடிவதில்லை.

அசுரன்
குன்றக்குடி கோயில் யானை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம் - பாகன் கைது

சுயசாதி பெருமிதமில்லாத சமூகமே என் கனவு

‘ஆலால ஓஞ் சிரிப்பு கொத்துதய்யா / அச்சறுந்த ராட்டினம்போல சுத்துதய்யா / கொல்லையில வாழ எல / கொட்டடியில் கோழி குஞ்சு / அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா / ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா’ என்ற தொடர் கிடைத்ததும், ஒரு போராளியின் மரணம் ஏற்படுத்தும் சந்தேகங்களை சொல்லியதாகப் பட்டது.

‘சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா / சாவையுமே கூறுபோட்டு கொல்லய்யா’ என்னும் தொனி தஞ்சாவூர் வட்டார வழக்கிலிருந்து வரிதத்து. சாக்குபோக்கு சொல்லாதே என்பதுதான் சால்சாப்பு.

‘மண்ணோடு சாஞ்சாலும் / மல்லாந்து போனாலும் / அய்யா நீ பெரும சாதி சனத்துக்கு’ என்பதற்கு விளக்கம் தேவையில்லை. சுயசாதி பெருமிதமில்லாத சமூகமே என் கனவு. என்றாலும், இந்த இடத்தில் அந்த வார்த்தைகள் அவசியப்பட்டன.

கதையையும் சூழலையும் உற்று நோக்கினால் உணரலாம். வேளாண்மை சமூகத்தின் வேதனையைச் சொல்ல ‘உழைக்க எண்ணுற ஆள / உதைச்சு தள்ளுற ஊர / கைய கால வெட்டிவீசும் கருப்பு நீ’ என்றிருக்கிறேன்.

அசுரன்
“மனைவியிடம் கட்டாய உறவில் கணவர் ஈடுபடுவதை குற்றமாக ஏற்க முடியாது” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு!

காட்டேரி, கருப்பு, தெய்வம் - வாழ்வியல் நம்பிக்கைகள்

காத்தும் கருப்பும் அண்டாது வளர்த்தவனை காணவில்லையே என்கிற தாயின் துக்கமே அது. மரணமில்லா பெருவாழ்வை ‘காட்டேரி ஒன்னக் கண்டா ஓடாதோ / காப்பாத்த தெய்வம் வந்தே சேராதோ’ என கேள்வியாக முடித்தேன். காட்டேரி, கருப்பு, தெய்வம் என்பதெல்லாம் வார்த்தை விளையாட்டில்லை. வாழ்வியல் நம்பிக்கைகள். நடுகல் வரலாற்றை குறிக்க ‘கல்லாகி நின்றாயோ’ என்ற பதம் பயன்பட்டது. ‘தலைச்சன் புள்ளயில்லாம / சரிந்ததெத்தனை ஆட்சி’ என்னும் சொல்லாடல், ஒரு குடும்பத்தில் மூத்த மகனுக்கு தரப்படும் இடம்.

அரசனோ அன்றாடங்காய்ச்சியோ பரம்பரைத் தொடர வாரிசு வேண்டும். காயங்களை முதுகில் வாங்கினானா, மார்பில் வாங்கினானா எனப் போர்க்களத்திற்கே போய்ப் பார்த்த புறநானூற்றுப் பாடலை ‘வாளேந்தி வந்தாலும் / வாழாம செத்தாலும் / கம்பீரம் கொறஞ்சிடாத நெருப்பு நீ’ என்றாக்கினேன்.

வாழ்வுக்காக வீரச்சாவை அடைந்தவர்களே நாட்டார் தெய்வங்கள். அநீதிக்கு எதிராக முதல் கல்லை வீசத்துணிந்த ஓர்ஆணோ பெண்ணோ அக்கிரமக்காரர்களால் கொல்லப்பட்டால், அவர்களை வழிபடுவதும் வணங்குவதும் தொல்குடி மரபு. நாட்டார் தெய்வங்கள் குறித்தும் வழக்காற்றியல் குறித்தும் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரைளை எழுதியிருக்கிறார். அவை நூல்களாகவும் (தமிழரின் தாவர வழக்காறுகள், வரலாறும் வழக்காறும், நாட்டார் வழக்காற்றியல் அரசியல்) வந்துள்ளன.

அசுரன்
இத்தாலி: குப்பையிலிருந்து எடுக்கப்பட்ட ஓவியம்... 60 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த ருசீகர சம்பவம்!

நில அரசியலையும் குல அரசியலையும் தெரிந்துகொள்ள அவருடைய ஆய்வுகளும் கட்டுரைகளும் உதவுகின்றன. தொன்மத்தின் வழியே கட்டமைக்கப்பட்ட வரலாற்றை மறுக்கவும் மறுபரிசீலனைச் செய்யவும் இடமுண்டு. எனினும், அவற்றை மிகையென்று தள்ளிவிடமுடியாது. விதைகள், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்திற்கும் நம்முடைய பண்பாடு வழங்கியுள்ள இடத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் இயற்கையை விளங்கிக்கொள்ளலாம்.

அந்த வகையில் எள்ளும் ஆமணக்கும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆமணக்கு எண்ணெய் குறித்த அயோத்திதாசப் பண்டிதரின் சித்திரிப்புகள் கவனத்துக்குரியவை. இப்பாடலை மண்மணம் மாறாமல் பாடிய ஜீ.வி.பிரகாஷூம் சைந்தவியும் நீடூழி வாழவேண்டும். நகரத்திலேயே வாழும் அவர்கள் தென்மாவட்ட மண்ணையும் மனிதர்களையும் இசையிலும் குரலிலும் கொண்டுவந்தது ஆச்சர்யமளிக்கிறது.

பாட்டென்பது வெறும் பாட்டல்ல, பண்பாடு

வெகுதூரத்தில் மட்டுமே தூவப்பட்ட எள் விதைகளை வீட்டுக்குள்ளும் இறைந்த நிம்மதி. தீண்டாமை, செடிகளுக்கும் கூடாதென்பதே என் குறிக்கோள். ஈழத் தமிழர்கள் மாவீரர் தினத்தன்று இதே பாடலைப் புதுவிதமாகப் படத்தொகுப்பு செய்து வெளியிட்டனர். வேலரசியலும் நூலரசியலும் தெரிந்த தமிழர்களுக்குப் பாட்டென்பது வெறும் பாட்டல்ல, பண்பாடு" என்று குறிப்பிட்டு இருப்பார்.

அசுரன் படம் என்றாலே சாதிய கொடுமைகளுக்கு எதிரான படம் என்பதே பலருக்கும் தோன்றும். ஆனால், அதுவும் முக்கியமானதுதான் அதில் சந்தேகமில்லை. ஆனால், அதனையெல்லாம் தாண்டி மேற்கூறிய பல உணர்வுபூர்வமான அம்சங்கள் அப்படத்தில் பேசவேண்டியிருக்கும். ஒரு கலைப்படைப்பு எப்பொழுது காவியத் தன்மையோ அல்லது கிளாசிக் தன்மையோ பெறும்?.. ஒரு கதைக்குள் பல கதைகளை தனித்தனியாக உணர முடிந்தால் அது காவியத் தன்மைக்கு நெருக்கமாக வரும். அப்படி அசுரன் படத்தில், அனுபவம் வாய்ந்த தந்தைக்கும்.. வேகத்தில் தவறுகள் செய்யும் மகனுக்கும் இடையிலான பகுதியை பற்றி மட்டுமே தனியாக பேசலாம். சிவசாமி - பச்சையம்மாள் கதை மட்டும் தனியாக பேசலாம்.. பஞ்சமி நிலம் குறித்த உரையாடலை தனியாக பேசலாம்.. இப்படி தனித்தனியாக பார்த்தால் நிறையாக தெரியும் பல விஷயங்கள் அசுரன் படத்தில் இருக்கிறது. வெற்றிமாறன் தான் இயக்கிய படங்களில் மிகவும் குறைவான நேரத்தில் முடித்த படம் அசுரன் தான். ஆனால், மற்ற படங்களை காட்டிலும் மிகவும் ஆழமான உணர்வுபூர்வமான காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கும். திரைக்கதையின் வேகமான போக்கு உணர்வுபூர்வமாக காட்சிகளை விட மற்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துவிட்டது. அதனால், அசுரன் குறித்து இன்னும் நிறைய பேசுவோம். காலம் கடந்து பேசுவோம்..

அசுரன்
அமராவதி முதலை பண்ணை: கீழே கிடந்த தங்கச் சங்கிலியை மீட்டு சிறுவர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com