நண்பனின் மரணத்தை நேரில் கண்டதால் திகில் கதையாசிரியரான ஸ்டீபன் கிங்!

நண்பனின் மரணத்தை நேரில் கண்டதால் திகில் கதையாசிரியரான ஸ்டீபன் கிங்!
நண்பனின் மரணத்தை நேரில் கண்டதால் திகில் கதையாசிரியரான ஸ்டீபன் கிங்!
Published on

தவறாகக் குற்றம்சாட்டப்பட்டுத் தண்டனை பெறும் அப்பாவி இளைஞர், சிறையில் இருந்து தப்புவதற்காக இருபது ஆண்டுகளாகத் தீட்டும் திட்டத்தை அற்புதமாக விளக்கிய ஹாலிவுட் திரைப்படம் ஷஷாங் ரிடம்ஷன். உலகம் முழுவதும் இன்றுவரை வெளியான திரைப்படங்களில் சிறப்பானதாகக் கருதப்படும் திரைப்படம் இது. யதார்த்தமான கதாபாத்திரங்கள் மூலம் நட்பு, பொறுமை, தன்னம்பிக்கை என பல்வேறு பண்புகளை தத்ரூபமாகச் சொல்லும் இந்தத் திரைப்படத்தின் மூலக்கதைக்குச் சொந்தக்காரர் ஸ்டீபன் எட்வின் கிங். அமெரிக்காவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.

திகில், புதிர், புனைவு மற்றும் அதீத கற்பனைக் கதைகளுக்குப் பெயர் பெற்ற இவரது படைப்புகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. இவர் எழுதி இதுவரை 35 கோடி புத்தகங்கள் விற்றிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் படைத்துள்ள மொத்த புதினங்கள் 50. சிறுகதைகளின் எண்ணிக்கை 200ஐத் தொடும். இவரது கதைகள் பெரும்பாலும் அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தில் நடப்பதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். பல கதைகள் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும், சித்திரக் கதைகளாகவும் வெளியாகியுள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ஷஷாங் ரிடம்ஷன். தாம் எழுதிய கதைகளில் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டது இதுதான் எனக் கூறுகிறார் ஸ்டீபன் கிங்.

கிங், 1947-ம் ஆண்டு மேய்ன் மாநிலத்தில் உள்ள ஸ்கேர்பரோ நகரில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது, அவரது நண்பன் ரயிலில் அடிபட்டு இறக்கும் காட்சியை நேரில் கண்டதாகவும், அதுவே அவரை ஒரு திகில்கதை எழுத்தாளராக உருவெடுக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற கிங், தொடக்க காலத்தில் பள்ளி ஆசிரியர் பணி கிடைக்காமல் தவித்து வந்தார்.

1973-ம் ஆண்டு கேர்ரி என்ற தனது முதல் நாவலை எழுதிய கிங், ஒரு கட்டத்தில் கதைப்போக்குப் பிடிக்காமல் கையெழுத்துப் பிரதியை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாகக் கூறப்படுகிறது. பிறகு தனது மனைவி அளித்த ஊக்கத்தால் அதை எழுதி முடித்தார். வியப்பளிக்கும் வகையில் முதலில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றுத்தந்த அந்த நாவல், பின்னாளில் சில கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுத் தந்தது. பிறகு திரைப்படமாகவும் வெளியானது. கேரி என்ற பள்ளிச் சிறுமி ஆழ்மன ஆற்றல் மூலம் தன்னைச் சித்திரவதை செய்தவர்களைப் பழிவாங்குவதான் கதை. பள்ளிக் குழந்தைகளிடையே தவறான சிந்தனையைத் தூண்டுவதாக, அமெரிக்கப் பள்ளிகளில் பல முறை தடை செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நாவல் இது.

இதைப் போலவே தி ஷைனிங் என்ற நாவலும் ஸ்டீபன் கிங்குக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ஒரு விடுதியில் தங்கும் எழுத்தாளர், தனது சக்தியின் மூலம் அங்கு நடந்த பழைய சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வருவதாக இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. தி மிஸ்ட் என்ற மற்றொரு புகழ்பெற்ற நாவல் நகரில் திடீரென ஏற்படும் பனிமூட்டத்தையும் அதைத் தொடர்ந்து நடக்கும் திகில் சம்பவங்களையும் சொல்கிறது.

தனது எழுத்தால் சிகரத்தை எட்டிப்பிடித்த கிங், எழுத்துத் துறைக்கான அமெரிக்காவின் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். ஏன் திகில் கதைகளையே அதிகமாக எழுதுகிறீர்கள் என்று கேட்டால், யதார்த்த வாழ்க்கையில் நடக்கும் கொடுமைகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனச் சொல்வதற்காகத்தான் என்கிறார் இந்த மாறுபட்ட சிந்தனையாளர். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com