“அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவுக் கதை” - கொட்டுக்காளி படக்குழுவிற்கு கமல்ஹாசன் பாராட்டு

"சாளரமல்லாத சிறையாக தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது. புதிய பார்வையாளர்களும், புதிய படைப்பாளர்களும் பல்கி விட்டார்கள்” என்று கொட்டுக்காளி திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் வெகுவாக பாராட்டியுள்ளார்.
கொட்டுக்காளி குழுவினர்
கொட்டுக்காளி குழுவினர்புதியதலைமுறை
Published on

விமல் - லக்ஷ்மி மேனனின் நடிப்பில் உருவான ‘மஞ்சப்பை’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து, பின்னர் ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ். வினோத்ராஜ். பல்வேறு சர்வதேச விருதுகளை இந்தப் படம் பெற்றிருந்தது. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ், அடுத்ததாக சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

விடுதலை, கருடன் படங்களை தொடர்ந்து கதையின் நாயகனாக நடிகர் சூரி நடித்துள்ள திரைப்படம்தான் கொட்டுக்காளி. மலையாளத்தில் ‘கும்பலங்கி நைட்ஸ்’, ‘ஹெலன்’, ‘கப்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான அன்னா பென், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளை வென்றுள்ளது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொட்டுக்காளி படத்தை நடிகர் கமலஹாசன் பார்வையிட்டு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொட்டுக்காளி' என்ற மத்திய அரசுச் சான்றிதழ் திரையில் தோன்றும் கணத்தில் இருந்து ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்ற குறிப்பைப் பார்த்ததுமே தமிழ் சினிமா ராக்கூத்து யுகத்திலிருந்து மீண்டு நவீன கதைசொல்லி ஒருவனின் களமாகிவிட்டது புரிகிறது.

தம்பி சூரியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் இல்லை. மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரும் தெரியவில்லை. பாண்டியன் எனும் கதாபாத்திரம்தான் தெரிந்தார். காலில் கல் கட்டிய சேவல் ஒன்று விடியலுக்காகக் கூட கூவாமல் குழம்பி நிற்கிறது. மறுபுறம் நம் கண்ணுக்குத் தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்தச் சேவலையே வெறித்துப் பார்க்கிறாள். 'கொட்டுக்காளி டைட்டில் திரையில்.

கண் இமைக்கும் நேரத்தில் கால் கட்டை உதறித் தப்பிக்கிறது சேவல். வெறித்துப் பார்த்த பெண்ணின் கண்ணில் சின்ன எதிர்பார்ப்பு. பின் இரு உறவினர்கள் சேவலை துரத்திப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். பெண்ணின் கண்ணில் நம்பிக்கை மங்குகிறது. இவள்தான் நாயகி.

உலகத்தைத் தலைகீழாக அண்ணாந்து பார்த்தபடி அறிமுகமாகிறான் பாண்டி. அவன் கழுத்தில் ஒரு வெண்சுண்ணாம்புக் களியைத் தடவி விடுகிறாள் ஒரு பெண். பாண்டிக்குத் தொண்டைக் கட்டாகவும் இருக்கலாம் அல்லது புற்றுநோயின் ஆரம்பக் கட்டமாகக்கூட இருக்கலாம். ஓர் இளம்பெண்ணின் கல்லூரிக் காதலையும் கேன்ஸரையும் எந்த ஒரு புரிதலும் இல்லாது அணுகும் ஒரு கிராமத்துக் குடும்பம்.

கிராமம் என்றால், சிமென்ட் சாலை, வாகன வசதி, செல்ஃபோன், டாஸ்மாக், சானிட்டரி நாப்கின், 24 மணி நேர மின்சாரம் என 21-ஆம் நூற்றாண்டின் நவீன வசதிகள் நிறைந்த கிராமம். இருப்பினும் 'எங்க வீட்டு பிள்ளைக்குப் பேய் பிடிச்சுருக்கு... பேய் ஓட்டக் கூட்டிப்போறோம்' என்று விசாரிப்பவர்களிடம் கூசாமல் சொல்கிறான் பாண்டியன். வழிமொழிகிறது குடும்பம்.

போகிற வழியெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள் விற்கும் வண்டி ஒன்று பேயாய் ஆடிச்செல்கிறது. கண்ணேறு தவிர்க்கும் அசுர முகங்கள் இன்னொரு வண்டியில் பே பேயாடுகிறது. நடுவழியில் டாஸ்மாக் பேய் என்று பல பேய்களின் ஆட்டம் தென்பட்டாலும் அவை பூசாரிகளால் விரட்ட முடியாத பேய்கள் எனப் புரிந்துகொள்கிறோம்.

இது பேய்க் கதைதான். காதல் பேய்க் கதை. நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது. பின்னணி இசை என்று எதுவும் இல்லை. டைட்டில் கார்டில் வரும் 'இயற்கைக்கு நன்றி' என்ற வாசகத்தின் பொருள், ஒளிப்பதிவிலும் ஒலிப்பதிவிலும் தெரிகிறது. இயற்கைதான் படத்தின் இசை. குலதெய்வக் கோயிலை நெருங்குகையில் சிறுவன் கார்த்திக் வாயால் கொடுக்கும் சினிமாப் பாணி பின்னணி இசைதான் ஒரு சின்னக் கிண்டலுடன் இந்தப் படத்தில் அவை இல்லை என்பதை நினைவுபடுத்துகிறது.

ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன், பூசாரி என்று பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம், காலம் மாறிவிட்டதை மற்ற பாத்திரங்கள் புரிந்துகொள்ளாவிடினும் பார்வையாளர்களாகிய நமக்கு படம் பிடித்துக் காட்டப்படுகிறது.

கடைசியில் இயக்குனர், பாண்டியனையும் நம்மையும் பகுத்தறிவின் கரையோரமாகவும் மனிதத்தின் விளிம்பிலும் நிறுத்திவிட்டு, தன்னுடைய கடமை முடிந்த சந்தோசத்தில் விளக்கை அணைத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறார். இந்தக் காதல் கதையின் முடிவை பாண்டியனைப் போலவே நாமும் உணர உந்தப்படுகிறோம்.

இது கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் அல்ல. இனி இது போன்ற நல்ல சினிமாக்களும் தமிழில் அடிக்கடி வரும் எனக் கூறும் கட்டியம். ஒரு சிலருக்கு எச்சரிக்கை. ரசனைக் குறைபாடுள்ளவர்கள் தம்மை விரைவில் மேம்படுத்திக் கொள்ளாவிடில் நல்ல நவீன சினிமாவின் நீரோட்டத்தில் கலக்க முடியாது. கரையிலேயே நின்றபடி தண்ணீரை அசுத்தப்படுத்தாமல் அவர்கள் தங்கள் தாகங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

கொட்டுக்காளி குழுவினர்
“காய் செம இல்லாத ஊர பாத்து ஓடிப்போயிரலாம்ல” - அம்பேத்கர், மார்க்ஸ்.. கவனம் ஈர்க்கும் வாழை ட்ரெய்லர்!

மொத்தத்தில் கொட்டுக்காளி குழுவினர் அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவுக் கதை ஒன்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக இயற்கைக்கு மட்டுமல்ல திரு. சிவகார்த்திகேயனுக்கும் நன்றி.

சாளரமல்லாத சிறையாக தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது. புதிய பார்வையாளர்களும், புதிய படைப்பாளர்களும் பல்கி விட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com