பாஜக அரசுகள் தடை: உச்சநீதிமன்றத்தில் பத்மாவத் தயாரிப்பாளர் மனு

பாஜக அரசுகள் தடை: உச்சநீதிமன்றத்தில் பத்மாவத் தயாரிப்பாளர் மனு
பாஜக அரசுகள் தடை: உச்சநீதிமன்றத்தில் பத்மாவத் தயாரிப்பாளர் மனு
Published on

பாஜக ஆளும் மாநிலங்களில் பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பத்மாவத்'. இதில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கர்னி சேனா அமைப்பு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு சிக்கல்களைக் கடந்து இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.

பல்வேறு தடைகளைத் தாண்டி 'பத்மாவத்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என்று பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா மற்றும் மத்திய பிரதேச அரசுகள் தடை விதித்துள்ளன. கோவா காவல்துறையினரும் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால், பத்மாவத் படக் குழுவினருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாநில அரசுகள் தடை விதித்துள்ளதற்கு எதிராக பத்மாவத் படத்தை தயாரித்த விஸ்காம்18 நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அவசர வழக்காக விசாரித்து, மாநில அரசுகள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com