ரஜினியை அறையும் காட்சியா.? முத்து படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்..!

ரஜினியை அறையும் காட்சியா.? முத்து படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்..!
ரஜினியை அறையும் காட்சியா.? முத்து படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்..!
Published on

 ரஜினிகாந்த் நடித்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான முத்து வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1995ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஜப்பானிலும் வெளியாகி ரஜினிக்கான ரசிகர்களை உருவாக்கியது. இந்தப் படம் குறித்த நினைவுகளை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்...

கே.எஸ். ரவிக்குமாார் 

"ஒருநாள் ரஜினி சார் என்னை அழைத்தார். எனக்கு ஒரு படம் இயக்கமுடியுமா என்று கேட்டார். பெரிய குடும்பம் படம் அப்போது நடந்துகொண்டிருந்தது. அதற்குப் பிறகு செய்கிறேன் என்றேன். தேன்மாவின் கொம்பத்து படம் பற்றிய அவுட்லைனை என்னிடம் தெரிவித்தார். உடனே திரைக்கதை எழுதுங்கள் என்றார். அப்போது எங்களுக்கும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. செலவுக்காக பணம் தருகிறேன் என்றார். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அவரிடம் கூறினேன்.

உட்லேண்ட்ஸ் ஹோட்டல் அறையில் ரமேஷ் கண்ணா மற்றும் சில உதவி இயக்குநர்களுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டோம். திரைக்கதை எழுதத் தொடங்கினோம். ஸ்கிரிப்ட் ரெடியானதும் ரஜினி சாரிடம் தெரிவித்தேன். இப்போது தேன்மாவின் கொம்பத்து பாருங்கள் என்றார். போய் பார்த்தா, அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. ரஜினி சிரித்தார். ஸ்கிரிப்ட் எழுதுவதற்கு முன்னர் இன்ஸ்பிரேஷன் இருக்கக்கூடாது என்பதால், அந்தப் படத்தை நான் பார்க்கவேண்டாம் என நினைத்திருக்கிறார்.

முத்து படத்தில் ராஜா கதாபாத்திரத்திற்காக நாங்கள் முதலில் அரவிந்த் சாமியைத்தான் அணுகினோம். அதில் ரஜினியை அறைவது மாதிரி காட்சி. அவரோ ரஜினியின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தார். அப்படியெல்லாம் செய்தால் ரஜினி ரசிகர்கள் விரும்பமாட்டர்கள் என்று மறுத்துவிட்டார். அடுத்து ஜெயராமை பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிப்பில் சந்தித்துப் பேசினேன். அறைவது போன்ற காட்சியை மாற்றச் சொன்னார். கடைசியாக ரஜினிசார்தான் சரத்பாபுவை பரிந்துரை செய்தார். இருவரும் நல்ல நண்பர்கள். அது நல்ல பலனைத் தந்தது.

ரஜினி சார் ஒரு படம் பண்ணாருன்னா, அதை மனசுல வைச்சுதான் வசனம் எழுதுவோம். நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் அல்லது விக்கலு தும்மலு போன்ற வசனங்களை ரசிகர்களுக்காக வழங்கிவிட்டோம். கிடைக்கிறது கிடைக்காம இருக்காது போன்ற சில பஞ்ச் வரிகளை அவர் எழுதினார். துண்டைத் திருப்பிப் போடும் ஸ்டைலையும் ரஜினி சார் உருவாக்கிக்கொண்டார். ஆனால் வசனங்களோ, ஸ்டைலோ படத்தின் கதையைத் தாண்டிப் போகவில்லை.

மைசூரில்தான் முதல்கட்ட படப்பிடிப்பு. முதல் காட்சியை எடுத்துவிட்டு க்ளைமேக்ஸ் காட்சிக்குப் போய்விட்டோம். அங்கே 5 ஆயிரம் மக்கள் கூடிவிட்டார்கள். படமே முடிஞ்ச மாதிரி இருக்கே என்றார் ரஜினி சார். பின்னர் சென்னைக்கு வந்துவிட்டோம். உதயம் தியேட்டரில் மூன்றாவது வாரமே முத்து படத்தைத் தூக்கிவிட்டார்கள். ஒரு படம் ஐம்பது நாள்கள் ஓடினால், அது சராசரியான படம். நான் கவலைப்பட்டேன். ஆனால் ரஜினி சார் நம்பிக்கையுடன் இருந்தார். கடைசியில் அந்தப் படம் 88 நாள்களுக்கு ஹவுஸ்புல்லாக ஓடியது" என்று பசுமையான நினைவுகளில் மூழ்கி முத்தெடுத்துள்ளார் கே. எஸ். ரவிக்குமார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com