மனதை ஈர்க்கும் கண்ணம்மா.. காலம் கடந்து நிற்கும் கண்ணம்மா..

மனதை ஈர்க்கும் கண்ணம்மா.. காலம் கடந்து நிற்கும் கண்ணம்மா..
மனதை ஈர்க்கும் கண்ணம்மா.. காலம் கடந்து நிற்கும் கண்ணம்மா..
Published on

தமிழ் சினிமாவில் ‘கண்ணம்மா’ என்ற வார்த்தையில் அமையும் பாடல்கள் ‘காலா’ வரை நீண்டுள்ளது. ‘கண்ணம்மா’ என்ற வார்த்தை இன்னும் எத்தனை காலம் நம் மனங்களை கட்டிப்போடுமோ தெரியவில்லை. 

தமிழ் உலகிற்கு தன்னுடைய ஒப்பற்ற கவிதைகளில் ‘கண்ணம்மா’ என்ற வார்த்தையை பாடலாக கொடுத்தவர் பாரதியார்தான். ஆனால் அந்தக் கண்ணம்மா வார்த்தையை பாரதியே எழுதவில்லை என்பரும் உண்டு. பாரதிக்கு முன்பும் யாரேனும் எழுதியிருக்கலாம். ஆனால், பாரதிதான் நம்முடைய இதயங்களை வருடி அங்கேயே குடியிருக்கும் அளவிற்கு கண்ணம்மாவை நமக்குள்  நுழைத்தார்.

 “நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி -- கண்ணம்மா! 
தன்னையே சசியென்று சரண மெய்தினேன்”

 “காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்”

பாரதியின் இந்தக் கவிதை வரிகள் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நம்மை ஆனந்தத்தில் மூழ்க வைத்தது. பாரதி தொடங்கி வைத்த ‘கண்ணம்மா’வை தமிழ் சினிமாவில் பலரும் பாடலாக கொடுத்து நம்மை ரசிக்க வைத்துள்ளார்கள். அதில், பாடல் எழுதுபவர்களின் பங்களிப்பும்,  இசையமைப்பாளர்களின் பங்களிப்பும், பாடகர்களின் பங்களிப்பும் இருக்கும். 

‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் இளையராஜா இசையில் ஜானகியுடன் அவர் பாடிய ‘கண்ணம்ம்ம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி’ பாடல் நம் பலருக்கும் தெரிந்தது. 

“கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில் 
உந்தன் கிள்ளை மொழியினிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளித் துள்ளி வரும் நடையில்
மனம் மெல்லத் துடிப்பதும் ஏன்
உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வா ராயோ வா ராயோ..” என்ற அந்தப் பாடலில் மூழ்கி எத்தனை இரவுகளை நாம் களித்திருப்போம். 

அதேபோல், கண்ணே கணியமுதே என்ற படத்தில் இளையராஜா இசையில் கே.ஜே.ஏசுதாஸ் குரலில் ‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா’ என்ற பாடலும் முக்கியமான ஒன்று. 

“நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்  --(நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே!-- நித்ய கன்னியே! —கண்ணம்மா!  --(நின்னையே)

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ ---
கண் பாராயோ? வந்து சேராயோ? கண்ணம்மா ? --(நின்னையே)” என்ற அந்தப் பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் நன்றாக இருக்கும். அமலாவின் நடனமும் நன்றாக இருக்கும். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கண்ணம்மா’ என்ற வரிகளை கொண்ட பாடல்  ‘றெக்க’ படத்தில் இடம் பிடித்தது. ‘கண்ணம்மா.. கண்ணம்மா.. அழகு பூஞ்சிலை, என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை’ என்ற அந்தப் பாடல் வரிகள் நம் மனங்களை கொள்ளைக் கொண்டது. டி இமான் இசையில் நந்தினி ஸ்ரீகர் பாடலுக்கு இளைஞர்கள் தாண்டி எத்தனையோ பேர் உருகினார்கள். அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதமும் எல்லோருக்கும் பிடித்திருந்தது. 

தற்போது, அந்த வரிசையில் ‘காலா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணம்மா’ பாடலும் இடம் பெற்றுள்ளது. மே 9ம் தேதி தான் அந்தப் பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. சந்தோஷ் நாரயணன் இசையில் உமா தேவி இந்தப் பாடலை எழுதியுள்ளார். பிரதீப் குமார், தீ, அனந்து மூன்று பேரும் இந்தப் பாடலை பாடியுள்ளனர். ‘கண்ணம்மா கண்ணம்மா...கண்ணிலே என்னம்மா..’ என்ற வரிகளை உருகி பாடியிருக்கிறார்கள் பிரதீபும், அனந்தும். கேட்கக்கேட்க பாடல் நம் இதயத்தை மெல்ல மெல்ல கொள்ளை கொள்கிறது. இந்தப் பாடலின் வரிகள் மிகவும் காதல் வயப்பட்ட வரிகளாக உள்ளது.

  ‘ஆகாயம் சாயாமல் தூவானமேது..ஆராம ஆராம காயங்களேது’,
‘தீராக் காதல் தீயாக மோத தூரங்கள் மடை மாறுமோ’,
‘ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கணக்கின்றதே’ என்ற வரிகள் நம்முடைய மனதை ஏதோ செய்கின்றது. ‘கண்ணம்மா’ என்ற வார்த்தை இன்னும் எத்தனை காலம் நம் மனங்களை கட்டிப் போடுமோ தெரியவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com