'அந்நியன்' கதை உரிமை விவகாரத்தில் பிரச்னை எழுந்த நிலையில் தற்போது அதன் இந்தி ரீமேக் குறித்து தயாரிப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் 'அந்நியன்' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அந்த திரைப்படத்தை 'பென் ஸ்டூடியோ' தயாரிக்கவிருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஆனால், இந்தத் திரைப்படத்தை ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை பெறவில்லை என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் வழக்கு தொடரப்போவதாக அறிவித்து, இதற்காக இயக்குநர் ஷங்கர் மற்றும் அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
மேலும், "அந்தப் படத்தின் அனைத்து மொழிக்கான உரிமையும் என்னிடமே உள்ளது. அந்தக் கதையை சுஜாதாவிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்து முறையாக பெற்றுள்ளேன்" என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் திடீர் சலசலப்பு எழுந்தது. இதையடுத்து இயக்குநர் ஷங்கர் " 'அந்நியன்' படத்தின் கதை திரைக்கதை எனக்கே சொந்தம். அந்நியன் கதை திரைக்கதையை எழுதித்தரக்கோரி நான் யாரிடமும் கேட்கவில்லை. வசனம் மட்டும் சுஜாதா எழுதினார்” என்று விளக்கம் அளித்து இருந்தார்.
ஒரு மாதங்களுக்கு மேலாகியும் இந்த விஷயத்தின் மேல் நடவடிக்கை என்னவென்பது தெரியாமல் இருந்தது. இந்தநிலையில், 'அந்நியன்' இந்தி ரீமேக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது படத்தை தயாரிக்கும் 'பென் ஸ்டூடியோ' நிறுவனம்.
சமீபத்தில் இந்த நிறுவனம் தாங்கள் தயாரிக்கப்போகும் படங்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இதில், அந்நியன் இந்தி ரீமேக்கும் இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் இந்தி ரீமேக் உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பாலிவுட் வட்டாரங்கள், "அந்நியன் பிரச்னையில் இருதரப்புக்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கதை உரிமை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும்" என்று தெரிவித்துள்ளன.