ஜிஎஸ்டி: கொண்டாட்டமும்.. போராட்டமும்..!

ஜிஎஸ்டி: கொண்டாட்டமும்.. போராட்டமும்..!
ஜிஎஸ்டி: கொண்டாட்டமும்.. போராட்டமும்..!
Published on

ஒரே நாடு ஒரே வரி என்ற முழக்கத்தோடு அறிமுகம் செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை‌ வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதற்கு ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.  

பாஜகவினர் கொண்டாட்டம்

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலாக்கப்பட்டதை பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் கொண்டாடினர். தலைநகர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் பாரதிய ஜனதாவை சேர்ந்த இளைஞர் பிரிவினர் பெருந்திரளாக திறண்டு ஆடி பாடி கொண்டாடினர். இதே போன்று உத்தரபிரதேசம் வாரனாசியில் மேல தாளங்கள் முழங்கி இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். லக்னோவில் வெடி வெடித்து பாரதிய ஜனதாவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மத்திய பிரதேசம் போபாலிலும் பாரதிய ஜனதா தொண்டர்கள் ஜி.எஸ்.டி வரி விதிப்பு விலை வாசியை குறைக்கும் என கூறி ஆடி, பாடி பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதோடு ராஜாஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலும் பாரதிய ஜனதா தொண்டர்கள் ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டதை வெடி வெடித்து கொண்டாடினர்.

வர்த்தகர்கள் போராட்டம்

ஜி.எஸ்.டி வரி விதிப்பை எதிர்த்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். திருவாரூரில் விஜயபுரம் வர்த்தக சங்கத்தினரும், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வணிகர் சங்கத்தினரும் கறுப்புக் கொடியேற்றி முழக்கமிட்டனர். சென்னை கோயம்பேடு சந்தை வளாகத்தில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை சார்பாக கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்ற வெள்ளையன் ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆன்‌லைன் விற்பனைக்கே சாதகமாக இருக்கும் என்றும், சில்லரை வணிகத்தை பாதிக்கும் எனவும் கூறினார்.


ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிடக்கோரி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருச்செங்கோடு சுற்று வட்டாரப் பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கவில்லை. 28 சதவீதமாக, இரட்டிப்பாக உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 800க்கும் மேற்ப்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

தீப்பெட்டி உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்‌ள 18 சதவீத ஜிஎஸ்டியை குறைக்கக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு‌பட்டுள்ளன. பகுதி இயந்திர நிறுவனங்களுக்கு 5 சதவீதம், முழு இயந்திர நிறுவனங்களுக்கு 12 சதவீதமாக இருந்த வரி, ஜிஎஸ்டியில் 18 சதவீதமாகியிருக்கிறது. அதனால் தீப்பெட்டி தொழில் பாதிக்குமென உற்பத்தியாளர்கள் கவலை கூறினர். ஜிஎஸ்டி வரி விதிப்பு பொதுமக்களில் பெரும்பாலானவர்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும், பொருளாதார நிபுணர்களால் ஜிஎஸ்டி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கைகள் பரிசீலனை
இதற்கிடையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 3 மாதங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் சனிக்கிழமைகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்கள் குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் இக்கூட்டங்களில் பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com