குற்றம்

சேலம்: சிறுமியை கட்டாய திருமணம் செய்ததாக டீ மாஸ்டர் போக்சோவில் கைது

kaleelrahman

ஓமலூர் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டரை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அங்குள்ள டீ கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 7 மாதத்திற்கு முன்பு தும்பிபாடியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் சில நாட்கள் இருந்து விட்டு பாட்டியின் உதவிக்காக, சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இந்நிலையில், சிறுமிக்கும், டீ மாஸ்டர் சரவணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரவணன், அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறியதோடு கட்டாயப்படுத்தி தாலி கட்டியுள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருவரும் பாட்டி வீட்டிலேயே கணவன் மனைவிபோல வாழ்ந்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்திருப்பதாக, சேலம் மாவட்ட சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் நடததிய. விசாரணையில் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டு சேலத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் குழந்தை திருமணம் குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் போலீசார், சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சரவணன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோவில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.