அரியலூரில் தக்காளி கிலோ 3ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அரியலூர் அருகே ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்ன பொண்ணு. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றார். கொடி தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுவரும் இவர், தன்னுடைய வயலில் சாகுபடி செய்யும் தக்காளியை அரியலூர் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றார்.
முன்பு கிலோ 7 மற்றும் 5 ருபாய்க்கு விற்பனை ஆன தக்காளி, தற்போது 3 அல்லது 2 ரூபாய் விற்பதால் மிகுந்த நஷ்டம் ஏற்படுவதாகவும், கூலி வேலை ஆட்களுக்கே இந்தத் தொகை போதவில்லை எனவும் அவர் வேதனையுடன் தெரிவிக்கிறார். அத்துடன் கடன் கொடுத்தவர்கள் வீடு புகுந்து அடிக்க வருவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே தங்களுக்கு அரசு உதவி செய்யும் வகையில் பள்ளி சத்துணவு, அங்கன்வாடி, கோயில் அன்னதானம் மற்றும் விடுதிகளில் வாங்கும் காய்கறிகளை, நேரிடையாக தங்களிடம் வாங்கினால் தங்களின் குறைந்த பட்ச வருவாய்க்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார். இவரைப் போன்றே அப்பகுதி விவசாயிகள் பலரும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.